டார்கெட் 'செந்தில் பாலாஜி'.. எதிர்க்கட்சிகள் ஆயுதம்.. புஸ்ஸுனு போயிருச்சே.. எப்படி சமாளித்தார்!
சென்னை : கடந்த 2 மாதத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் டார்கெட் செய்யப்பட்ட அமைச்சர் என்றால் அது செந்தில் பாலாஜி தான். இவர் கடுமையாக டார்கெட் செய்யப்பட மின்வெட்டு காரணம் என்றாலும், மின்வெட்டு பிரச்சனையை அரசியலாக மாற்றி மிகப்பெரிய அளவில் கொண்டு சென்ற எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்த போதும், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
ஏனெனில் மின்வெட்டு பிரச்சனை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பியதுடன், சமூக வலைதளங்களில் அவர்களது ஆதரவாளர்கள் எழுப்பிய கேள்விகள் முதல்வர் ஸ்டாலினின் அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது உண்மை.
இதனால் ஆரம்பத்தில் மின் பராமரிப்பு பணிகள் ஊரடங்கு முடியும் வரை இருக்காது என்று கூறிய செந்தில் பாலாஜி, போர்க்கால அடிப்படையில் மின் பராமரிப்பு பணிகளை முடிக்க உத்தரவிட்டார். இதன்படி மின் பராமரிப்பு பணிகள் கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடந்தது. இப்போது மின்வெட்டு பிரச்சனை இருக்காது என்று செந்தில் பாலாஜியே அறிவித்து முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி அடைந்துள்ளார்.

ஜெயலலிதா
தமிழத்தில் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மின்வெட்டு பெரிய பிரச்சனையாக இருந்தது. 2011ல் திமுக மிகப்பெரிய அளவில் தோற்றதற்கு மின்வெட்டும் முக்கிய காரணமாக இருந்தது. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மின்வெட்டை ஒழிப்பேன் என்று கூறினார். அதன்படியே மின்சார உற்பத்தியை அதிகரித்ததுடன், கூடுதலாக வெளியில் இருந்து வாங்கி மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினார்.

செந்தில் பாலாஜி
இந்நிலையில் 10 வருடத்திற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக அமைச்சரவையில் மிகவும் முக்கியமான அமைச்சர் பதவிகளால் ஒன்றான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டது. அதிமுகவில் இருந்த விலகி, பின்னர் அமமுகவில் சேர்ந்து பின்னர் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கரூர் மாவட்டத்தில கோலோச்சிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடித்ததுடன், கரூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதியிலும் திமுக வென்றதால் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டதாக சொல்லப்பட்டது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே மின்வெட்டு ஏற்பட தொடங்கியது. தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. சிறிது நேரமே என்றாலும் மக்கள் வித்தியாசமாக உணர தொடங்கினர். இந்த பிரச்சனையை கவனித்த அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுது நாட்களிலேயே எழுப்ப தொடங்கின. சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜியை விமர்சிக்க தொடங்கினர்.
இதை ஆரம்பத்தில் பெரிய பிரச்சனையாக மாறாது என்று நினைத்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெரிய நெருக்கடியாக மாறியது. கடைசியில் அவர் அதிமுக அரசு தேர்தல் ஆதாயத்திற்காக பராமரிப்பு பணிகளை 9மாதமாக மேற்கொள்ளவில்லை. மின் கம்பங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் பழுதடைந்துள்ளன. பல ஆயிரம் மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். அத்துடன் அணில்கள் காரணமாகவும் மின் வெட்டு ஏற்படுவதாக கூறினார்.

எப்படி சமாளித்தார்
அணில்கள் காரணமாக மின்வெட்டு ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை பிடித்துக்கொண்ட அரசியல் கட்சிகள் அவரை கிண்டல் செய்ய தொடங்கின. அவரும் பதிலடி கொடுத்தார். அணில் காரணமாக அமெரிக்காவில் மின்வெட்டு ஏற்பட்டது. அதிமுக அரசே மின்வெட்டு அணில் காரணம் என்று நீதிமன்றத்தில் கூறியது என பல தகவல்களை புள்ளி விவரத்துடன் கூறினார். இறுதியாக மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் பராமரிப்பு பணிகளும் நடந்தது. இப்போது மின்வெட்டு இனி ஏற்படாது என்றும், மாதம் ஒரு முறை பராமரிப்பு பணியின் போது மட்டும் ஏற்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கு வந்த பிரச்சனையை அமைச்சர் செந்தில் பாலாஜி சமாளித்துவிட்டார். எனினும் இந்த பிரச்சனை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது.












Click it and Unblock the Notifications