ஆமாங்க!... என் தலைமையில்தான் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்- கரூர் சின்னசாமி
Recommended Video
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தினகரனின் நம்பிக்கைக்குரியவருமான செந்தில் பாலாஜி நாளை திமுகவில் என்னுடைய தலைமையில் இணையவுள்ளதாக திமுகவின் கரூர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, நடந்த அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்ததே. தினகரன் ஆதரவாளராகிவிட்டார் செந்தில் பாலாஜி. இவர் மாத்திரம் இல்லாமல் 18 பேரும் தினகரனுக்கு ஆதரவாக இருந்தனர்.
தகுதிநீக்கம்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துவிட்டார்.
தாவுகிறார் பாலாஜி
இதனிடையே தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். இந்த 18 பேரும் அந்த கட்சியில் பல்வேறு பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் தினகரன் அணியிலிருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவுகிறார் என செய்திகள் வந்தன.
மறுப்பு
இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அமமுக தொண்டர்களுடன் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அதை திசை திருப்புவதற்காக அதிமுகவினர் சொல்லும் வதந்தி. நான் அமமுகவைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றார்.
செந்தில் பாலாஜி
இந்நிலையில் செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே செந்தில் பாலாஜி நாளை ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணையலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உறுதி
இந்த தகவலை கரூர் சின்னசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுகவில் கரூர் மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா பதவி வழங்கிய போது அதிருப்தி ஏற்பட்டதால் கரூர் சின்னசாமி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு வருவதால் கரூர் சின்னசாமி அதிமுகவுக்கு திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.
என் தலைமையில்..
இதுகுறித்து சின்னசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவரோ அதிமுகவுக்கு செல்வது சுடுகாட்டுக்கு செல்வதற்கு சமம். எனக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் கேட்டால் என்னுடைய தலைமையில்தான் செந்தில் பாலாஜி நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைகிறார் என அடித்து கூறி அத்தனை யூகங்களை உறுதிப்படுத்தினார்.
ஊடகங்களில்...
செந்தில் பாலாஜி, அமமுகவை விட்டு எங்கும் செல்லமாட்டார் என தங்கதமிழ்செல்வன் ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில் இதுபோன்ற புகைப்படத்தாலும் தகவல்களாலும் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் நம்பிக்கைக்குரியவர்களுள் செந்தில் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.