நரம்பை எடுத்துட்டாங்க! காலை அசைக்க கூட முடியாதுனு சொன்ன செந்தில் பாலாஜி! நீதிபதி அல்லி சொன்னது என்ன?
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்காக காலில் இருந்த நரம்பை நீக்கிவிட்டார்கள், என்னால் காலை அசைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறேன் என செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் உருக்கமாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான தீர்ப்பை அளித்தது.

இதையடுத்து இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேகலா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீது உச்சதநீதிமன்றம் கடந்த மாதம் இறுதி முதல் 4நாட்களுக்கு விசாரணை நடத்தியது.
அதில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் வாதம் செய்த துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். அவர் மீது பல வழக்குகள் உள்ளதால் அவரை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்தது. அதில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை காவலில் எடுக்கலாம். அதே நேரம் அவருடைய உடல்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்காக புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார்.
அப்போது அவர் லேசான தாடியுடன் சோர்வாகவே காணப்பட்டார். நீதிபதியிடம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை அமலாக்கத் துறை அதிகாரிகள் காண்பித்தனர். அப்போது அவர் செந்தில் பாலாஜி! உங்களை உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்புகிறோம் என்றார். அப்போது செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சை காரணமாக எனது காலில் இருந்த நரம்பை மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள்.
அதனால் எனது காலை அசைக்கக் கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோருகிறேன் என்றார். அதற்கு நீதிபதி அல்லி, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துவிட்டது. நான் தனியாக எந்த உத்தரவையும் போட முடியாது. உச்சநீதிமன்றத்திலேயே உங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் உங்கள் உடல்நிலை குறித்து விளக்கியுள்ளனர்.
அதற்கு உச்சநீதிமன்ற அமர்வு, அதையெல்லாம் அமலாக்கத் துறை பார்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளது. எனவே உங்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிடுங்கள் என கூறி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications