நம்பலைனா கூட்டி வாங்க! பாயிண்ட்டை பிடித்த செந்தில்பாலாஜி மனைவி தரப்பு.. அமலாக்கத்துறைக்கு கவுன்ட்டர்
சென்னை: இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை நம்பவில்லை என்றால் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்கட்டும் என வாதங்களை முன்வைத்தார் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் நடத்தப்பட்ட நிலையில் அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ரத்தக்குழாய்களில் மூன்று அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு: இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வாதம்: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர் என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது என வாதங்களை முன்வைத்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி: அதற்கு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரிமாண்ட் சட்டவிரோதமாக இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே நீதிமன்றம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கைது சம்பந்தமாக யாருக்கும் எந்த நோட்டீஸும் அளிக்கவில்லை, எனவே சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும் வாதாடினார்.
மேலும், மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கவுன்ட்டர் அட்டாக்: அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரால் சுந்தரேசன், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லையா? என உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்றும், தமிழ்நாடு அரசின் மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை என்றால் மதுரையில் இருந்து அல்ல, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்கட்டும்" என வாதங்களை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications