செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கும் இதய பிரச்சனை என 4 வாரம் அவகாசம் கேட்கிறார்.. அமலாக்கத்துறை பரபர!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தனக்கும் இதய பிரச்சனை இருப்பதால் ஆஜராக 4 வாரங்கள் அவகாசம் கேட்கிறார், இதயத்தில் பிரச்சனை என்று சொல்வது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் பரபரப்பான வாதத்தை முன்வைத்துள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

3வது நீதிபதி விசாரணை: இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். இந்நிலையில் இன்று, கபில் சிபல் ஆஜராகி அமலாக்கத்துறை வாதங்களுக்கு பதில் வாதங்களை முன்வைத்தார்.
செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரம் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். கைது செய்யப்பட்ட பின், குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்ய முடியாது; ஏனென்றால் அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல என்று வாதிட்டார்.
அப்போது அமலாக்கத்துறை ஒரு முக்கியமான தகவலை கோர்ட்டில் தெரிவித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரான அசோக் தனக்கும் இதய பிரச்னை இருக்கின்ற காரணத்தினால் ஆஜராக நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்பதாகவும், இதயத்தில் பிரச்சனை என்று சொல்வது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது என செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
அதற்கு, 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அசோக் குமார் தனக்கு இதய பிரச்சனை இருப்பதாக கூறியது பற்றி தான் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என நீதிபதி கூறினார். செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சற்று நேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications