செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பை நிறுத்தி வைத்த சென்னை முதன்மை நீதிமன்றம்
சென்னை: செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அவருக்கு 15 மாத சிறை வாசத்திற்கு பின்னர் ஜாமீன் கிடைத்த நிலையில் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் இருந்த போதே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையில் இருவர் அவருக்கு ரூ 25 லட்சம் பிணை செலுத்த வேண்டும்.
திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை மிரட்டக் கூடாது, சந்தித்து பேசக் கூடாது. அமலாக்கத் துறை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வாய்தா மேல் வாய்தா வாங்கக் கூடாது உள்ளிட்ட விவகாரங்கள் நிபந்தனைகளாக கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் அவர் மீண்டும் அமைச்சராக பதவி வகிக்க எந்த தடையையும் உச்சநீதிமன்றம் வகிக்கவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் உடனடியாக பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இதனால் அவரது நீதிமன்றக் காவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கில் 58 முறை செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த மற்றொரு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஒரு சாட்சி வரவில்லை. எனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications