செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் செந்தில் பாலாஜியின் வியூகங்கள் எப்போதும் தனித்துவமானவை.. இந்த முறை அவர் கோவை தெற்கு தொகுதியில் களம் இறங்கியுள்ள நிலையில், கரூரிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட ஒரு வியக்கத்தக்க காயை நகர்த்தியுள்ளார்.. அதுகுறித்த ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
எப்போதுமே கொங்கு அரசியல் என்றாலே அது செந்தில் பாலாஜிதான்.. ஆனால் கரூரில் மையப்புள்ளியாக இருப்பவர் அவரது சகோதரர் அசோக்..

கரூரில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தியாகராஜனின் மனுவில் பிரமாணப் பத்திரம் இல்லாததால் அது நிராகரிக்கப்படும் சூழல் நிலவியது.. அதே நேரம், அங்கு மாற்று வேட்பாளராக அசோக் அனைத்து ஆவணங்களுடனும் தயாராக இருந்தார்.. இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட சுவாரஸ்யம் என்னவென்றால், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜிக்கும் மாற்று வேட்பாளராக அவரது தம்பி அசோக்கே மனுத் தாக்கல் செய்திருக்கிறார்..
அதாவது, அசோக் ஒரே நேரத்தில் தனது அண்ணனுக்காக கோவையிலும், அண்ணனின் ஆதரவாளருக்காக கரூரிலும் மாற்று வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது..
செந்தில் பாலாஜி மாஸ்டர் மூளை
ஒருவேளை கரூரில் தியாகராஜனின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால், அங்கு அசோக் திமுகவின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.. அப்படி ஒரு சூழல் உருவானால், கோவை தெற்கு தொகுதியில் மாற்று வேட்பாளராகத் தான் தாக்கல் செய்த மனுவை அசோக் வாபஸ் பெற்றுவிடுவார்.. இந்த மொத்தத் திட்டமும் செந்தில் பாலாஜியின் ஆலோசனையின் பேரிலேயே நடப்பதாக சொல்லப்படுகிறது..
கரூரில் தனது ஆதரவாளர் வெற்றி பெற்றால் பிற்காலத்தில் அவர் தனக்கு விசுவாசமாக இருப்பாரா என்ற சந்தேகம் செந்தில் பாலாஜிக்கு இருந்து கொண்டே இருந்தது.
ஒருவேளை தனக்கென ஒரு அரசியலை அவர் உருவாக்கிக் கொண்டால் கரூரில் தனது ஆதிக்கம் குறைந்துவிடும் என அவர் எண்ணியிருக்கலாம்.. அதனால்தான் தனது குடும்ப உறுப்பினரே அங்குக் களம் காண்பது பாதுகாப்பானது என அவர் முடிவெடுத்ததாக தெரிகிறது,
அண்ணன் - தம்பி அரசியல் ஆட்டம்
ஆனாலும், கரூரில் சொல்லப்படும் இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் அனைத்தும் திமுக மேலிடத்திற்குத் தெரிந்தே நடப்பதாக உடன்பிறப்புகள் முணுமுணுக்கின்றனர்.. தலைமைக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய முடிவை செந்தில் பாலாஜி எடுத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்..
கோவையில் அண்ணனும், கரூரில் தம்பியும் என இந்தத் தேர்தல் களம் செந்தில் பாலாஜி குடும்பத்தின் வசமாகுமா என்பது இன்று நடக்கவிருக்கும் மனுக்கள் பரிசீலனையில் தெளிவாகிவிடும்.. தியாகராஜனின் மனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப்படுமா என்பதில் தான் கரூரின் அடுத்தகட்ட அரசியலே அடங்கியிருக்கிறது.. என்ன நடக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
லாஸ்ட் நிமிட பத்திரம்
இந்த விவகாரம் அதிமுக - பாஜக கட்சிகளுக்கு கசிந்துள்ள நிலையில், இதனை செந்தில் பாலாஜிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என செந்தில் பாலாஜிக்கு சொல்லப்பட்டிருக்கிறது.. இந்த நிலையில்தான்., மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மாலை 5 மணி எனும் நிலையில், நேற்று மாலை 4:40 - க்கு அவசரமாக தனது பிரமாண பத்திரத்தை ஆன் - லைனில் இணைத்துள்ளார் தியாகராஜன்..
இதன் மூலம் செந்தில் பாலாஜி தரப்பின் ஆரம்பக்கட்ட திட்டத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது இதுவும் வியூகத்தின் ஒரு பகுதியா என்பது இன்று தெரிந்துவிடும்..!!
- எழில்












Click it and Unblock the Notifications