சென்னையில் 7 வயது பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. கொடூர தந்தை தலைமறைவு
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் 7 வயது பெண் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் செங்குன்றம் சாலை 5 வது தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செவிலியராக பணியாற்றி வரும் லாவண்யா என்பவர் அவரது இரண்டு மகள்களோடு தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும் இவரது கணவர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாத காலங்களாக தனித்தனியாக வகித்து வந்துள்ளனர்.

குழந்தை காயம்
வழக்கம்போல லாவண்யா இன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு இரவு பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன் காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து ஏழு வயது சிறுமியான வதனா ஸ்ரீ என்ற குழந்தையை கழுத்தை அறுத்துள்ளார்.

தலைமறைவு
சிறுமி ரத்த காயத்துடன் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் பெற்ற மகள் என்றும் பாராமல் கொலை செய்த கொடூர தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜானகி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

போலீசுக்கு தகவல்
புதுக்கோட்டை நகரில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தருக்கு தகவல் வந்தது அதன் அடிப்படையில் டிஐஜி தனிப்படை போலீசார் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் திருக்கோகரணம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள அபிராமி நகரப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சோதனை செய்தனர்.

140 கிலோ கஞ்சா
அந்த வீட்டில் இருந்த ஜானகி என்ற பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சென்ற தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில் வீட்டில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஜானகியை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். காவல் நிலையத்தில் கஞ்சா மூட்டைகளை எடை போட்டுப் பார்த்தபோது 140 கிலோ இருந்தது தெரியவந்தது.

ஜானகி கைது
இதன் மதிப்பு 14 லட்ச ரூபாய் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக தலைமறைவாகியுள்ள ஜானகியின் உறவினர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் மதுரையிலிருந்து கஞ்சா வாங்கி வந்து புதுக்கோட்டையில் அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications