தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில்.. 3 வயது குழந்தையை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு சென்ற மர்ம நபர்
சென்னை: சென்னையின் புறநகர் ரயில் வழித்தடமான கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் உள்ள சானடோரியம் ரயில் நிலையத்தில், 3 வயது ஆண் குழந்தையை ரயில்வே பிளாட்பார்மில் மர்ம நபர் ஒருவர் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே போலீசார், நிர்கதியாய் நின்ற அந்த குழந்தையை மீட்டு பரங்கிமலைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் மிகவும் பிஸியான புறநகர் ரயில் வழித்தடமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரூட் உள்ளது. இந்த ரூட்டில் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரூட்டில்தான் சென்னையில் நேற்று கல் நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

3 வயது ஆண் குழந்தை
ரயிலில் வந்த நபர் ஒருவர் மூன்று வயது ஆண் குழந்தையை ரயில்வே பிளாட்பார்மில் இறக்கி விட்டு சென்றுள்ளார். சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை புறநகர் மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய நிலையில், மர்ம நபர் ஒருவர் 3 வயது ஆண் குழந்தையுடன் ரயிலில் இருந்து இறங்கினார்.
நிர்கதியாய் நின்ற குழந்தை
சில வினாடிகளில் ரயில் புறப்பட்டதும் அந்த மர்ம நபர் மட்டும் ரயிலில் ஏறிவிட்டு, குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார். சரியாக ரயில் புறப்படும் போது, குழந்தையை அப்படியே பிளாட்பார்மில் விட்டுவிட்டு அந்த நபர் மட்டும் ரயிலில் ஏறி சென்றார். இதனால் ஏதும் அறியா அந்த சிறு குழந்தை சானடோரியம் ரயில் நிலையத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றி வந்தது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே போலீசார், நிர்கதியாய் நின்ற அந்த குழந்தையை மீட்டு பரங்கிமலைக்கு அழைத்து வந்தனர். அந்த குழந்தையை தேடி யாராவது வருவார்களா என்று காத்திருந்தனர். ஆனால் யாரும் வராததால், குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சானடோரியத்தில் உள்ள ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
எதற்காக விட்டுச் சென்றார்?
அப்போது, வாலிபர் ஒருவர் குழந்தையை ரயிலில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. ஆண் குழந்தையை இறக்கி விட்டு சென்ற நபர் யார்? அந்த குழந்தை யாருடையது? எதற்காக ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்துவிட்டு விட்டுச் சென்றார்? என்ற பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் குழந்தையை மர்ம நபர் ஒருவர் விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications