சீமான் 'கள்' குடித்து பங்கேற்ற மாநாட்டில் பகீர்.. பச்சிளம் குழந்தைக்கும் 'கள்' ஊற்றிவிட்ட கொடுமை!
சென்னை: தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் இன்று கள் விடுதலை மாநாட்டை நடத்தின. இந்த மாநாட்டில் தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது மேடையில் 'கள்' குடித்து தமது ஆதரவைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பச்சிளம் குழந்தைக்கும் கூட 'கள்' ஊற்றிக் கொடுக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கள் இறக்குமதி, விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை வலியுறுத்தி பேசி வருகிறார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயகத்தின் சார்பாக இந்த கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் தடையை மீறி ஆண்களும் பெண்களுமாக கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சீமான் பங்கேற்றார். அப்போது பொது மேடையிலேயே சீமானுக்கு பனை ஓலையில் கள் ஊற்றிக் கொடுக்கப்பட்டது. இதனை குடித்த சீமான் தனது பாணியில் கையை ஓங்கி உயர்த்திக் காண்பித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கள் உணவுப் பொருள் என்ற முழக்கத்துடன் கள் குடித்தனர்.

அப்போது விவசாயி ஒருவர் தம் கையில் தூக்கி வைத்திருந்த கை குழந்தைக்கு முதலில் கள்ளை தொட்டு ஊட்டி விட்டார். பின்னர் பனை மட்டையிலேயே கள்ளை குடிக்க வைத்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய குடிபானங்களும் தமிழ்த் தேசிய மதுபானங்களும்- சீமான்
இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: ஒரு காலம் வரும்.. பதநீர், இளநீர், கரும்புச் சாறு, பழச்சாறு இவை எல்லாம் தேசிய குடி பானங்கள். இதை நீங்கள் குடித்துதான் ஆக வேண்டும். இதனை ரோட்டில் விற்பனை செய்ய விடமாட்டேன். நானே கடையை கட்டி விற்பனை செய்ய வைப்பேன். அதற்கு மாதம் ரூ50, ரு20 வாடகை கட்டி விற்பனை செய்ய வைப்பேன். என் உழைக்கும் மக்கள் வீதியில் போட்டு இவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கமாட்டேன். என் காலில் இருக்கும் காலணியை ஏசி ரூமிலும் வேளாண் பொருட்களை வீதியிலும் விற்பனை செய்ய அனுமதிப்பவன் நல்ல உழவன் குடியாகவே இருக்க முடியாது. ஏசி ரூமில் இருப்பதை தெருவிலும் தெருவில் இருப்பதை ஏசி ரூமுக்கும் மாற்றி விடுவேன்.. அதுதான் தலைகீழ் மாற்றம். பனம்பால், தென்னம்பால் ஆகியவை தமிழ்த் தேசிய மதுபானங்கள்.. மூலிகைச் சாறு என அறிவிப்போம். இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications