Final Voter List: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்! எந்த தொகுதியில் குறைவு?
சென்னை: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி இருந்து வருகிறது. அது போல் குறைந்த வாக்காளர்களை கொண்டது எது தெரியுமா?
தமிழகத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2,77,38,925 ஆண்களும், 2,89,60,838 பெண்களும், 7,671 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் 74,07,202 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 27,85,195 வாக்காளர்கள் உள்ளனர். அது போல் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாகப் பார்க்கும்போது, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். பட்டியல் வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து, தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் திருத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்காளர்கள் தங்கள் பெயரை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவால் அதிருப்தி அடைந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
முதல் மேல்முறையீட்டுத் தீர்ப்பிலும் திருப்தி இல்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, மாவட்ட கலெக்டரின் உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீட்டைத் தாக்கல் செய்யலாம். பெயர் சேர்க்க (படிவம் 6), திருத்தம் செய்ய (படிவம் 8) அல்லது நீக்க (படிவம் 7) போன்ற விண்ணப்பங்களை இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
புதிதாகப் பதிவு செய்யும் 18-19 வயது இளைஞர்களுக்கும், திருத்தங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும், அத்துடன் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ள ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்களுக்கும், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) விரைவு அஞ்சல் மூலம் அவர்கள் பதிவு செய்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர் திருத்தக் காலம் இன்று, அதாவது பிப்ரவரி 23, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜனவரி 1, 2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியுள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6ஐச் சமர்ப்பித்தோ அல்லது https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திலோ விண்ணப்பங்களைச் செய்யலாம்.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 'Voter Helpline App' செயலியைப் பதிவிறக்கி அதன் மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாயிலாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெற மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாநிலத் தொடர்பு மையத்தை 1800-4252-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் அணுகலாம்.












Click it and Unblock the Notifications