ஏமாற்று வேலை.. ‘நீட்’ கையெழுத்து வாங்கி யாரிடம் கொடுக்க போறாங்க.. திமுக மீது எடப்பாடி தாக்கு
சென்னை: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அதிமுகவும் சேர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில், இது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை என்றும் தேர்தல் வருவதால் இப்படி செய்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து வருகிறது. திமுக அரசின் சாதனை இதுதான். முதியோர் உதவித்தொகை திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது நிபந்தனை விதித்து தான் கொடுக்க முடியும் என்று மு.க ஸ்டாலின் சொல்கிறார்.

எவ்வளவு ஏமாற்று வேலை பாருங்க... இப்போது இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டார்... எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு கொடுக்க போகிறார். சொல்லுங்க பார்க்கலாம்.. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் என்ன சொன்னார்கள்...ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர். இப்போது இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஏன் செய்யவில்லை. இதை நம்பி..நம்பி.. பலபேர் உயிர் போனதுதான் மிச்சம்..
லோக்சபா தேர்தல் வருவதால்: இப்போ 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறார்களாம்.. கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு போய் கொடுத்து எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள்... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஜல்லிகட்டு போராட்டம் என்பது மாநில பிரச்சினை... எனவே இது வேற..அது வேற... நீட் தேர்வு என்பது இந்தியா முழுவதும் இருக்கிறது. எல்லா மாநிலமும் நீட் தேர்வை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. அதை மீறி யாரும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால் மக்களை போய் சந்திக்க வேண்டும். மக்கள் கேள்வி கேட்பார்கள்... அதற்கு ஒரு பதில் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு போலியான நாடகத்தை மக்களை ஏமாற்ற அரங்கேற்றி கொண்டு இருக்கிறார்கள்.
தெம்பு, திராணி இருந்தால்: இனி மக்கள் ஏமாற போவது இல்லை. திமுக செய்த ஒரு சாதனையை சொல்லுங்கள் பார்க்கலாம். தனது மகனை அமைச்சராக்கியது மட்டும் தான் மு.க ஸ்டாலின் செய்த சாதனை. திமுக ஆட்சியில் மக்கள் கண்ட பலன் இது மட்டும்தான். திமுக என்பது ஒரு குடும்ப கட்சி.. எடப்பாடிக்கு தில்..தெம்பு, திராணி இருக்கிறதா என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டார்..எல்லாம் இருப்பதால்தான் மக்களை தில்லாக வந்து சந்திக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு தெம்பு திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்... ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்கள் அதை செய்யுங்கள்.. உங்களுக்கு வேண்டியது அதிகாரம் மட்டுமே. மக்களை பற்றி கவலை கிடையாது. சிறுபான்மை மக்களை காக்க கூடிய அரசாக அதிமுக எப்போதும் இருக்கும்.
ஒரிஜனல் டீம்: சூழ்நிலை காரணமாகவே கூட்டனி அமைக்கப்பட்டதே தவிர ... கொள்கையை எப்பொழுதும் நாங்கள் விட்டுக்கொடுத்ததே கிடையாது. கொள்கை நிலையான ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். மீண்டும் பாஜகவுடன் அதிமுக சேர்ந்து விடும் என்று திமுக பேசுகிறது. எங்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. பயம்.. ஏனெனில் எதுவுமே செய்யவில்லை.
இதுவரைக்கும் சிறுபான்மை மக்களுக்கு நல்லது செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வாக்குகளை பெறுவதற்காக தந்திரம் செய்தனர். இஸ்லாமிய மக்களுக்காக அதிமுக எப்போதும் குரல் கொடுப்போம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது என ஏற்கனவே தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டது. வேண்டும் என்றே ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் வதந்தியை பரப்பி வருகிறார்கள். நாங்கள் பீ டீம் இல்லை.. ஒரிஜனல் டீம்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications