நோட்டாவை விட குறைவான வாக்கு...2021ல் பாஜக ஜெயித்தது எப்படி?..அண்ணாமலையை கேட்கும் அதிமுக ஐடி அணி
அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம் என்று அதிமுகவின் ஐ.டி. அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது என்று அதிமுகவின் ஐடி அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவை விமர்சனம் செய்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கை ராமச்சந்திரன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாஜகவிற்கு எதிரான கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்து போவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைய ஆரம்பித்து விட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணனும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த பின்னர் அண்ணாமலையின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மதுரை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அதிமுகவில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது வந்து பாஜகவை காப்பாற்ற மாட்டார்களா என இருந்தது. ஆனால் தற்போது சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக தான் கண் முன் தெரிகிறது. பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.
பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்க தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம்.
அரசியல் கட்சி அப்படி தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன் என்றார். நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை;ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பாஜகவை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம் என்றும் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலையின் பேட்டிக்கு பதில் தரும் வகையில் அதிமுகவின் ஐடி அணி செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார். நோட்டாவை வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது என்பதே இதற்கான பதில்! என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே! என்றும் கிண்டலடித்துள்ளார்.
எது எப்படியே அதிமுக பாஜக இடையே நீரு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை படிப்படியாக வெளிப்பட ஆரம்பித்து விட்டது என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து தேர்தலை சந்திக்குமா அல்லது புது கூட்டணியை உருவாக்குமா என்பது போக போக தெரியவரும்.












Click it and Unblock the Notifications