போச்சு.. ’SIR' 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு! சென்னையில் மட்டும் இத்தனை ஓட்டுகள் காலியாகுமா?
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) அடிப்படையில், வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற்ற SIR பணிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. இந்த பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கினர்.
வாக்காளர்கள் எளிதாக படிவங்களை பெறவும், திரும்ப ஒப்படைக்கவும் வசதியாக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதனையடுத்து, வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

SIR வாக்காளர் பட்டியல்
இந்த நிலையில், முதலில் நவம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து டிசம்பர் 11-ம் தேதி வரை படிவங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கியது. அதன்பிறகு, இரண்டாவது முறையாக மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, படிவங்களை திரும்ப பெறும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படிவங்களை திரும்ப வழங்குவதற்காக வாக்காளர்கள் ஆர்வமாக குவிந்தனர்.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இரண்டு முறை வழங்கிய கால அவகாசத்துடன், SIR படிவங்களை பெறும் பணி தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த படிவங்களின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியல்
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கப்பட்ட பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு, 2026 பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
70 பெயர்கள் நீக்கம்
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களே, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில், இறந்தவர்கள் - 25 லட்சம், இடம் மாறி சென்றவர்கள் - 40 லட்சம், இரட்டை பதிவு உள்ளவர்கள் - 5 லட்சம் என மொத்தம் 70 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செயலியில் பதிவேற்றம்
தற்போது தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், நேற்று வரை 99.99 சதவீதம், அதாவது 6 கோடியே 41 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 6 கோடியே 40 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள், அதாவது 99.97 சதவீதம் படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல்
இதனைத் தொடர்ந்து, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள், டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை தங்களது பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்பது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு, பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications