அடியோடு மாறுது ஊட்டி, கொடைக்கானல்.. இது நடந்தால் பயணிகளுக்கு ஹேப்பிதான்.. ஆனால் ஒரு சிக்கல் இருக்கே
சென்னை: மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. எனவே ஊட்டி, கொடைக்கானல் ஆகிய நகரங்களும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் எங்கேயாவது டூர் போக வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் மனதில் முதலில் தோன்றுவது ஊட்டி, கொடைக்கானல் ஆகத்தான் இருக்கும். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள குளுமையான தட்பவெப்ப நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். அதிலும் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
சுற்றுலா: மலைப்பகுதிகள் முழுவதும் கார், வேன்களில் பயணிகள் கூட்டம் சாரைசாரையாக வருவதை பார்க்க முடியும். சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இ பாஸ் வாங்கியே வர வேண்டும் என்ற விதியையும் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு செயல்படுத்தி வருகிறது. அளவுக்கதிகமாக வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவே இ பாஸ் விதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
ஊட்டி கொடைக்கானலை பொறுத்தவரை போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம் என்றாலும் நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் இருந்தன.
ஊட்டி, கொடைக்கானல்: இந்த நிலையில்தான், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய நகரங்கள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் கூறுகையில், "ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் அங்கேயே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவு ஆகும். அதேவேளையில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
அவர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. நிர்வாக ரீதியாக தரம் உயர்த்தினால் சுற்றுலா தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்தலாம். முந்தைய விதிகளின் படி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் நிலவியது. தற்போது, மாநகராட்சியை தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சட்டப்பேரவையில் அறிவித்தபடி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவை மாநகரட்சியாக தரம் உயர்த்தப்படும். அதேபோன்று , ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்" என்றார்.
கிராம மக்கள் எதிர்ப்பு: அதேவேளையில், ஊட்டியில் நகர எல்லைக்கு வெளியிலிருக்கும் மலைக்கிராமங்களை, தனித்தனி ஊராட்சிகளாக மாற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் போராடி வருகிறார்கள். அந்தக் கிராமங்களையும் ஊட்டியுடன் சேர்த்து மாநகராட்சியாக அறிவிக்க தற்போது மலைக்கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள், டீ - காபி எஸ்டேட்டுகள், காப்பு காடுகள், அரிய வனவிலங்குகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் ஊட்டியைச் சுற்றியிருக்கும் குக்கிராமங்களையும் சேர்த்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.












Click it and Unblock the Notifications