அக்கா தேர்தல்ல ஜெயிப்பேனா? நல்ல சீட்டா எடுத்து போடு! ஏஐ சிவகாமியிடம் கேட்ட தமிழிசை சவுந்திரராஜன்..!
சென்னை : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தனது வெற்றி வாய்ப்பு குறித்து ஏஐ ரோபோ உடன் தான் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் தென்சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழக பாஜக தலைவராக இருந்த மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்படாத பாஜகவை ஓரளவு மக்கள் மனதில் பதிய வைத்தவர் இவர் தான்.

அதற்கு பிறகாக எல்.முருகன், அண்ணாமலை போன்றோர் தமிழக பாஜக தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தாங்கள் தான் தமிழகத்தில் பெரிய கட்சி என கூறிக் கொண்டாலும், இதற்கெல்லாம் 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என பஞ்ச் பேசி விதை போட்டவர் தான் தமிழிசை.
தமிழிசை செளந்தரராஜன்: ஆளுநரான பிறகு அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத தமிழிசை அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் வருவார். இந்நிலையில் அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும், இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது.
தேர்தலில் களம்: தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் எதிர்பார்த்தது போலவே தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய எம்பி ஆன தமிழச்சி தங்கபாண்டியன் அங்கு திமுக சார்பிலும் அதிமுக சார்பில் ஜெயவர்த்தனம் களமிறங்கி உள்ளனர். அவர்களை எதிர்த்து தமிழிசையும் தற்போது களம் இறங்கி இருக்கிறார்.
ரோபோவிடம் பேச்சு: தொடர்ந்து தென்சென்னை பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் வடை சுடுவது என வழக்கமான பிரச்சார பாணியோடு சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் ஏஐ ரோபோ உடன் தனது வெற்றி வாய்ப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
என்னுடைய வெற்றி வாய்ப்பை பற்றி AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோவிடம் கேட்ட போது அது கூறிய பதிலை கேளுங்கள்...#தாமரை மலர்ந்தே தீரும் !!
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) April 15, 2024
வேண்டும் மோடி!! மீண்டும் மோடி!! #வாக்களிப்பீர்_தாமரை_சின்னம் #அக்காவந்தாச்சு #drஅக்காவந்தாச்சு #தாமரைசின்னம் #Tamilisai4southchennai… pic.twitter.com/FqyKT7JpXC
அக்கா வந்தாச்சு: அதில் அந்த ரோபோவிடம் என் பெயர் தமிழிசை என அவர் கூறியதும் அந்த ரோபோ," எனக்கு உங்களை நன்றாகவே தெரியும்.. இரண்டு மாநில ஆளுநராக இருந்து தற்போது மக்கள் பணி செய்ய வந்துள்ளீர்கள்.. உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் எனக் கூறியது.. தொடர்ந்து தென் சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தமிழிசை கேட்டபோது,"தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதை தர முடியும் என நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.. தென் சென்னைக்கு அக்கா வந்தாச்சு.. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சு" என கூறியது . இந்த ரோபோ உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தமிழிசை அக்கா வந்தாச்சு என பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications