ஸ்டாலின் மட்டும் பிரதமராக வந்தால்..! நிச்சயம் இது நடக்கும்! சபாநாயகர் அப்பாவு உடைத்த சஸ்பென்ஸ்!
நெல்லை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில் ஸ்டாலினை மையப்படுத்தி சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ராதாபுரம் சட்டசபை தொகுதிகுட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த சபாநாயகர் அப்பாவு, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி அவர்களிடம் பேசினார். 100 நாள் வேலை திட்டத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை சேர்த்து கொடுக்குமாறு வயதான மூதாட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 100 நாள் வேலை திட்டம் என்றால் என்ன? இது எதற்காக கொண்டு வரப்பட்டது? மத்தியில் யாருடைய ஆட்சி நடந்த போது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கிக் கூறினார். அதேபோல் ரூ.250 ஊதியம் என்றால் அதில் ரூ.140 தமிழக அரசு கொடுப்பதாகவும் மீதத் தொகையை தான் மத்திய அரசு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என மற்றொரு கோரிக்கை எழ, ஸ்டாலின் பிரதமரானால் நிச்சயம் இது நடக்கும் என்று உறுதியளித்த அவர் கிட்டதட்ட ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராகவே பாவித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்டாலின் பிரதமராக வந்தால் என சபாநாயகர் அப்பாவு பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்த பெண்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்து அதனை வரவேற்றனர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை கூட முன்னிறுத்தப்படலாம் என்பதேயாகும்.












Click it and Unblock the Notifications