ஒன்றல்ல.. இரண்டல்ல.. 6 கடிதம்.. எடப்பாடியை கிண்டல் செய்த அப்பாவு.. அந்த "சீக்ரெட்டை" சொல்ல மாட்டேன்!
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி 6 கடிதங்களை எழுதியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர் இன்று தொடங்கியது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர் நடக்க உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக இந்த இருக்கை விவகாரம் கவனம் பெற்றது. முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். ஆனால்தமிழ்நாடு சட்டசபையில் இன்று இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது.
ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று பேட்டி அளித்தார். அதில், இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான அறிக்கை சட்டசபையில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும். வேறு ஏதாவது சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டால் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அடுத்த இரண்டு நாட்கள் முழுமையாக சட்டசபை நடைபெறும். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை இரண்டும் சட்டசபையில் வைக்கப்படும்.

நாளை அவையில் இரண்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஒரு கடிதம் இல்லை.. இரண்டு கடிதம் இல்லை.. மூன்று கடிதம் இல்லை.. மொத்தமாக 6 கடிதம் கொடுத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் 2 கடிதம் கொடுத்து இருக்கிறார்.
அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெற்றுள்ளார். அவர் அந்த குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அதனால் அவர் குழுவில் இடம்பெற்று உள்ளார். அதிமுக தொடக்க விழா இன்று நடக்கிறது. இதற்காக அவர்கள் விழாக்களை நடத்துகின்றனர்.
இதன் காரணமாக அவர்களால் இன்று சட்டசபைக்கு வர முடியவில்லை என்று நினைக்கிறேன். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கடிதத்திற்கு நான் என்ன பதில் அளித்தேன் என்று சொல்ல முடியாது. அந்த ரகசிய விஷயங்களை நான் பேட்டியில் குறிப்பிட முடியாது. அது சட்டப்படி பொருத்தமாக இருக்காது.

ஆனால் நான் என் பதிலை சட்டசபையில் தெரிவிப்பேன். 6 கடிதங்களுக்கும் என்ன சொன்னேன் என்பதை சட்டசபையில் தெரிவிப்பேன். நாளை இதை பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பினால் பதில் கொடுப்போம். ஏன் இப்படி எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றவில்லை என்று சட்டசபையில் நாளை யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு பதில் அளிப்பேன்.
நீங்கள் நாளை செய்தி சேகரிக்க வரும் போது பாருங்கள். நான் கண்டிப்பாக அவையில் பேசுவேன். என்னிடம் கேட்டால் அதை பற்றி சொல்லுவேன். ஆனால் இங்கே அதை பற்றி பேச முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications