சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: மிலாடி நபி விடுமுறை, தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிலாடி நபி வரும் 16 ஆம் தேதி கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறை தெரிவதை வைத்து கணக்கிட்ட போது 17 ஆம் தேதிதான் மிலாடி நபி என தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வார இறுதி என்பதாலும் மிலாடி நபி விடுமுறையாலும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (வெள்ளிக் கிழமை), நாளை (சனிக்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 190 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications