எத்தனை முறை தான் டைம் கேட்பீங்க? செந்தில் பாலாஜி வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் வழக்கு தொடர தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை என தொடர்ந்து எத்தனை முறை தான் கால அவகாசம் கேட்பீர்கள் என அரசு வழக்கறிஞருக்கு சிறப்பு நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 - 15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத் துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயவேல், கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
பின்னர் விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்று வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விபரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications