இனி தப்ப முடியாது! கஞ்சா, போதை மாத்திரை போட்டு.. வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்க சீக்கிரம் புதிய கருவி
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலைச் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அபராத முறை வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாலை விபத்துகளைக் குறைக்கவே இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்து உள்ளது. சமீபத்தில் தான் இந்திய புதிய அபராத தொகை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி இருந்தது.

அபராதம்
அதன்படி சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி வேகமாகச் சென்றால் முதல் முறை 1000 ரூபாயும் அதன் பின்னர் ரூ 10,000 வசூலிக்கப்படும். ரேசில் ஈடுபட்டால் ரூ 15,000 முதல் ரூ 25,000 அபராதம் விதிக்கப்படும்.. சிக்னலில் விதிமீறினால் 500 முதல் 100 ரூபாயும் அபராதம் போடப்படும். அதேபோல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கினால் 5000 ரூபாய் அபராதமும், போனில் பேசிக் கொண்டு இயக்கினால் 10,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

நடவடிக்கை
இதனிடையே இந்த புதிய அபராத விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையில் சென்னை பெருநகர வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், "தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை போக்குவரத்து இடமாற்றம் குறித்தும் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மது விற்பனை
விபத்துகளைத் தடுக்கவே அபராதங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு வாகனங்கள் போக்குவரத்து வீதிகளை மீறினாலும் கூட சட்டம் பாயும். குடி போதையில் வேக ஓட்டினால் அபராதம் 2000 ரூபாய் 2 முறை 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் அருகே நின்று போலீசார் அபராதம் விதிப்பதில் தவறு இல்லை. டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அரசு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுமாறு யாரையும் சொல்லவில்லை.

யார் சோதனை செய்யலாம்
மது அருந்தும் நபர்கள் வாடகை வாகனங்கள் மூலமே செல்ல வேண்டும். அவர்களே வாகனங்களை ஓட்டி செல்லக் கூடாது. புதிய விதிகளின்படி போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மேல் இருக்கும் சட்ட ஒழுங்கு போலீசாரும் கூட பிரெத் அனலைசர் கருவி மூலம் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு சோதனை செய்யலாம். ஆனால், சிறப்பு உதவி ஆய்வாளரிடம் தவிர்த்து வேறு காவல்துறையிடம் கொடுத்தால் காவல்துறை மீதே தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அளிக்கலாம்
விதிமீறல் இல்லாமல் அபராதம் விதிக்கப்பட்டால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுபோன்ற சூழல்களில் பொய்யான புகார் என்பது உறுதியானால் அபராத தொகை திரும்ப அளிக்கப்படும். மேலும், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விபத்தால் ஏற்படும் மரணங்கள் 12.5% குறைந்து உள்ளது.

புதிய கருவி
இப்போது அபராத தொகை அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில், ஓட்டுநர்கள் மேலும் விழிப்புடன் இருப்பார்கள் என நம்புகிறோம். இப்போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டுபிடிக்க பிரெத் அனைலைசர் பயன்படுத்துகிறோம். இதேபோல கஞ்சா மற்றும் போதை மாத்திரை உட்கொண்டு வாகனம் ஓட்டுவார்களைப் பிடிக்கவும் புதிய கருவி குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications