Exclusive: கொங்குநாடு யார் கேட்டது..? பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும்... சீறும் தனியரசு..!
சென்னை: கொங்குநாடு கோரும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என சீறுகிறார் கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு.
Recommended Video
பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத வகையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் இது என அவர் கூறுகிறார்.
ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

10 ஆண்டுகள்
''கடந்த 10 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக பிசியாக இயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது சட்டமன்றத்துக்கு தான் செல்லவில்லையே தவிர மற்றபடி சமுதாயப் பணிகளை வழக்கமான முறையில் மேற்கொண்டு வருகிறேன். கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவ்வப்போது அலைபேசி மூலம் அரசியல் நகர்வுகள், நடப்பு அரசியல் குறித்து பேசுவேன்.''

பிரிவினைவாதிகள்
''கொங்குநாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசம் கோரும் பிரிவினைவாதிகளை ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும். கொங்குநாடு வேண்டும் என யாரும் இங்கு கேட்கவில்லை. தமிழகத்தை துண்டாட நினைப்பவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது. பாஜகவால் தமிழகத்தில் அவ்வளவு எளிதாக பரவமுடியாது. இதனிடையே 2026-ல் பாஜக ஆட்சி என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது.''

கர்வம் அதிகம்
''எடப்பாடி பழனிசாமி எனக்கு சீட் கொடுக்கமாட்டார் என்ற தகவல் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். திமுகவிலும் சீட் கிடைப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் கோரி திமுக, அதிமுக தலைமையிடம் நான் எந்தக் கடிதமும் அளிக்கவில்லை. நான் தான் போட்டியிட விரும்பவில்லையே தவிர கருணாஸையும், தமிமுன் அன்சாரியையும் தேர்தலில் எப்படியாவது போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தி வந்தேன்.''

சசிகலா
''கருணாஸ், தமிமுன் அன்சாரி, நான், ஆகிய மூவரும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல் மூன்று திசைகளில் இருந்து சட்டமன்றத்துக்கு சென்றவர்கள். அதிமுகவை சசிகலாவால் மட்டுமே வலிமையாக வழிநடத்த முடியும். இதில் மாற்றுக்கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர். அவரை அவரது கர்வமே அழிக்கும். சசிகலாவை இன்னும் ஓரிரு நாட்களில் சந்திக்க இருக்கிறேன்.''

சிறப்பான ஆட்சி
''முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை சிறப்பாக செயல்படுகிறார். இந்த பணிக்கு இந்த ஆள் தான் சரியாக இருப்பார் என கண்டறிந்து அதிகாரிகளை தேர்வு செய்து ஆட்சி நடத்துகிறார். அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்தவரை இன்னும் 6 மாதம் கழித்து தான் அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவரும். அப்போது அவர்களின் செயல்திறனை மதிப்பிடுகிறேன்.''












Click it and Unblock the Notifications