ஆயுத பூஜை.. சிறப்பு ரயில்கள் அறிவித்த ரயில்வே.. தமிழ்நாட்டிற்கு இப்படி.. வட மாநிலத்திற்கு அப்படி!
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை மங்களூரு இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு அதிகமாகும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூர்-நெல்லை, நெல்லை-தாம்பரம் மற்றும் சென்னை சென்டிரல்-மங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இன்று (20-ந்தேதி) இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்.06043) புறப்பட்டு நாளை (21-ந்தேதி) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக வரும் 24-ந்தேதி நெல்லையிலிருந்து மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மங்களூருக்கு இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (06047) புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06048) புறப்பட்டு அடுத்தநாள் காலை 11.20 மணிக்கு சென்டிரல் ரயில் நிலையம் வந்தடையும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு அதிகமாகும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.
இதனிடையே ரயல்வே நிர்வாகம், எர்ணாகுளம் தன்பாத் இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் 20ம் தேதியான இன்று எர்ணாகுளத்தில் இன்று இரவு 11.55க்கு புறப்பட்டு 22ம்தேதி அன்று இரவு 11 மணிக்கு சென்றடைய உள்ளது. இந்த ரயில் முழுக்க முழுக்க அன்ரிசர்வ் பெட்டிகள் நிறைந்தது ஆகும்.
இரண்டு நாள் முழுமையாக பயணிக்கும் இந்த ரயில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் நிலையில், வெறும் 10 மணி நேரம் அல்லது 8 மணி நேரம் செல்லக்கூடிய மதுரை, கோவை,நெல்லைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரயில்களை இயக்கலாமே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆயுத பூஜைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டின் தேவையை பொறுத்தவரை யானை பசிக்கு சோளப்பொறி என்பதால், ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத சிறப்பு ரயில்களை கன்னியாகுமரி வரை ரயில்வே நிர்வாகம் இயக்கினாலும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications