லீவு முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! நெல்லை டூ சென்னைக்கு முன்பதிவில்லா ரயில்
சென்னை: பண்டிகை விடுமுறை, வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் மனம் குளிர வைக்கும் வகையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு மெமு ரயிலும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் ரயிலும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் திங்கள் கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேபோல, ஆயுத பூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பலரும் சென்றனர்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. விடுமுறை முடிந்து நாளை சென்னை திரும்ப பயணிகள் திட்டமிட்டுள்ளனர். ரயில்கள், பேருந்துகள் அனைத்திலும் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன. ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் கூட கிட்டத்தட்ட 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் கதி கலங்கி போயுள்ளனர். இந்த நிலையில்தான், பயணிகளின் மனம் குளிர வைக்கும் வகையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
மதுரை டூ சென்னை
சென்னையில் இருந்து இன்று இரவு 11:45 மணிக்கு 'மெமு' சிறப்பு ரயில் புறப்படும். எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை காலை 10:15 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் போர்ட், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நெல்லை டூ சென்னை
அதேபோல, நாளை (அக்டோபர் 5) நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, நாளை மாலை 4:50 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
முன்பதிவில்லா இந்த ரயில்கள், 11 சேர்கார் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
பயணிகளுக்கு நிம்மதி
டிக்கெட் இல்லாமல் தவித்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு ரயில் என்பதால், டிக்கெட் கிடைக்காமல் அல்லாடிய பயணிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு.












Click it and Unblock the Notifications