அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்காக கிண்டியில் சிறப்பு மருத்துவமனை.. விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் சிகிச்சைக்கு வசதி இல்லை என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் அதிக ஆபத்து உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அதிநவீன சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்ற 81 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்கிழமை ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் அதிக ஆபத்து உள்ள நோயாளிகளுக்காக 500 அதிநவீன படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 4900 படுக்கைகள் மீதம் உள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை துறைமுகம் போர்ட் ஓல்ட் மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிதாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தேவையான மருத்துவர்கள் ஓரிரு நாளில் நியமிக்கப்பட உள்ளார்கள்.
கொரோனா சிகிச்சை அளிக்க இதுவரை 88 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளன. அந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள குறித்து பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும். எனவே சிகிச்சைக்கு வசதி இல்லை என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications