வானகரத்தில் தொடங்கி திருவேற்காடு சிக்னல் வரை அதிவேகமாக ஓடிய கார்! பறந்த டூல் வீலர்கள்! இருவர் பலி
சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் துரத்தி பிடித்து ஓட்டுநரை கடுமையாக தாக்கினர்.
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ளது விஜிஎன் குடியிருப்பு. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் சாய் சீனிவாசன் (33). இவர் மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நோக்கி தனது காரில் சென்றார். அப்போது வானகரத்தில் வாகனங்கள் எல்லாம் சிக்னலுக்காக நின்றிருந்தன.

ஆனால் சாய் சீனிவாசனோ சிக்னலில் நிற்காமல் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றார். அதைத் தொடர்ந்து வானகரம் மீன் மார்க்கெட் அருகே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கார் மோதியது.
அப்போது காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து அவரை பொதுமக்களும் சக வாகன ஓட்டிகளும் விரட்டி பிடிக்க முயன்ற போது அவர்கள் மீதும் காரை இடித்துவிட்டு வேகமாக சென்றார். இந்த நிலையில் திருவேற்காடு செல்வதற்காக வேலப்பன்சாவடி சிக்னலில் திரும்பும் போது சீனிவாசனின் காரை பேரிகாடு மூலம் போலீஸாரும் பொதுமக்களும் மடக்கி பிடித்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் கால்கள் முற்றிலும் முறிந்த நிலையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய நபரின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சீனிவாசனுக்கும் தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து மதுரவாயல், ஆவடி போக்குவரத்து புலனாய்வு ஆகிய 2 காவல் நிலையங்களில் சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போது அவர் வரமறுத்தார். மேலும் அவர் மது போதையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். அந்த காரில் 3 வயது குழந்தையும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த நபர் கண்டபடி கத்தி கூப்பாடு போட்டுள்ளார். அவரை தட்டிக் கேட்ட பொதுமக்களையும் கண்டபடி பேசியிருந்தார். வேலப்பன்சாவடி சிக்னலில் அந்த நபரை பிடிக்க போலீஸார் முயன்ற போது அவர் மீது வாகனத்தை ஏற்ற முயன்றார். நல்வாய்ப்பாக அவர் எகிறி குதித்து தப்பினார். நேற்று காலை 11.30 மணி என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதே பீக் அவர்ஸ்ஸாக இருந்திருந்தால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள்.













Click it and Unblock the Notifications