ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற ஸ்ரீதன்யாவின் விருப்பம் நிறைவேறியது... கமல்ஹாசனை சந்தித்தார்
Recommended Video
சென்னை: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கேரளாவின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா, சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், வயநாடு தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுலை, ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் வந்து சந்தித்தனர்.
4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலிலும் லேட்டாக வேட்பாளர்களை அறிவிக்கும் கமல்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதன்யா கூறுகையில், 'எங்களது வீடு, அரசு திட்டத்தின் வாயிலாக கட்டப்பட்டது. வீட்டில் மின் வசதி இல்லை. நான் டில்லிக்கு தேர்வெழுத சென்ற போது, பணம் இல்லாத நிலையில், எனது நண்பர்கள், 40 ஆயிரம் வழங்கினர்; உதவியை மறக்க மாட்டேன். மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார்.
அதே நேரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாகவும், ஆனால், எப்படி சந்திப்பேன் என தெரியவில்லை என்று கூறினார். இந்தநிலையில், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கேரளாவின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவை, கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம், ஸ்ரீதன்யாவின் விருப்பம் நிறைவேறி உள்ளது.