நீண்ட இழுபறிக்கு பிறகு இறுதி முடிவு.. தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக செல்வபெருந்தகை தேர்வு!
சென்னை: தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஸ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவரையே அ.தி.மு.க உடனே தேர்வு செய்து விட்டது. ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி என்பது காங்கிரஸ் தலைவருக்கு நிகரான பதவி என்பதால் கடும் போட்டி இருந்து வந்தது.

சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, எஸ்.ஆர்.முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை ஆகியோர் இடையே போட்டி கடுமையாக இருந்தது. இதன் காரணமாக இது தொடர்பாக காங்கிரஸ் நடத்திய பல ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் சட்டமன்ற துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஸ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இந்த தகவலை கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் டிவிட்டரில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications