Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் தேர்வு செய்திருப்பதற்குப் பின்னணியில் உள்ள சில அரசியல் காரணங்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

புதியதாகக் கட்சி தொடங்கியுள்ள விஜய், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆகவே இதன் மீது கவனம் குவிந்துள்ளது. ஒருவேளை அவர் பெரம்பூரில் வெற்றி பெற்றால் திருச்சி தொகுதி பதவியை ராஜினாமா செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

Srirangam is Jayalalithaa s ancestral home Trichy gave Jaya a political rebirth-do you understand Vijay s calculation

முன்னதாக திருச்சிராப்பள்ளி தொகுதியாக என அழைக்கப்பட்ட இது தொகுதி சீரமைப்புக்குப் பின்பாக திருச்சி கிழக்கு எனப் பெயர் மாற்றம் பெற்றது. தற்போது இத்தொகுதி திமுக வசம் உள்ளது. இனிகோ இருதயராஜ் வெற்றிபெற்றுள்ளார். முன்னதாக அதிமுகவில் செல்வாக்கு மிக்க வெல்லமண்டி நடராசன் போட்டியிட்டுள்ளார். 2016 இல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்தான். 2011 அதிமுக சார்பில் களம் இறங்கிய ஆர்.மனோகரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், இந்தத் திருச்சி தொகுதிக்கு என்று ஒரு தனி ராசி இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஆட்சியை இழந்த ஜெயலலிதா, 4 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாகவே இருந்தார். அதிகாரத்திற்கு வந்த திமுகவின் ஆட்சியில் மாநிலம் இருளில் மூழ்கியது. மாநிலம் முழுக்க மின்வெட்டு நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் வரை நீடித்தது. பெரிய பெரிய நிறுவனங்கள் முடங்கின. சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டன.

வீட்டில் மாவு அரைக்கக்கூட முடியாமல் மக்கள் அவதிப்பட்டன. திமுக ஆட்சியை 'மைனாரிட்டி' என வசை பாடிவந்த ஜெயலலிதாவுக்குத் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம்தான் 2011 தேர்தலுக்கான திருப்பு முனையாக அமைந்தது. அதாவது தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் முன்னதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். திருச்சி நகரமே அதிர்ந்தது. போக்குவரத்து நெரிசலால் மாவட்டமே திணறியது. அதுவரை அவரது பிரச்சாரத்திற்கு இந்தளவு ஆதரவு இருந்ததே இல்லை. அது மிகப்பெரிய செய்தியானது.

திருச்சிக்குச் சென்ற ஜெயலலிதா தன் மூதாதையர்களின் பூர்வீகம் இங்குள்ள ஸ்ரீரங்கம்தான் எனக் கூறினார். அங்கு வரும்போது உணர்ச்சிவயப்படுவதாகவும் தெரிவித்தார். சொந்த ஊருக்கு வரும் மனநிறைவை இந்த ஊர் தனக்கு வழங்கியிருப்பதாகவும் சென்டிமெண்ட் ஆக பேசினார்.

'ஜெ'வருகையால் திணறிய திருச்சி:

உண்மையில் மக்கள் கடல் அலைபோல் காட்சியளித்தனர். அதுவும் சரியான வெயில் நேரத்தில் இந்தளவுக்குக் கூட்டம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. திருச்சி விமானநிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மைதானத்திற்கு அவர் செல்வதற்குள் மூச்சு முட்டிவிட்டது.
ஜெயலலிதா பேசும்போது, "நான் எம்ஜிஆர் கேட்டுக்கொண்டதால் 1982 ஆம் ஆண்டு கழகத்தில் என்னை உறுப்பினராக்கிக் கொண்டேன். அன்று முதல் 28 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளில் இதைப்போன்ற மக்கள் வெள்ளத்தை நான் கண்டதே இல்லை. என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. இந்தத் திருச்சி மாநகரம் 'இரட்டை இலை' கோட்டையாகக் காட்சியளிக்கிறது.

இன்னும் 9 மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. தேசத்தின் விதியை மாற்ற, மாநிலத்தின் விதியை மாற்ற, ஏன் உங்களின் விதியையே மாற்ற திமுக 'மைனாரிட்டி' அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்" என்றார். அப்போது அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என யாரும் கணிக்கவில்லை.

தனது பூர்வீக பூமி எனச் சொன்னதைப்போல அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் களம் கண்டார். அதிமுக 8 கட்சி கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்தது. திமுக பாமக, விசிக ஆகிய 11 கட்சிகள் கூட்டணியுடன் போட்டியிட்டது. முதன்முறையாக விஜயகாந்த்தை தன் கூட்டணிக்குள் கொண்டுவந்தார் ஜெயலலிதா. பாஜக 204 தொகுதியில் தனித்து நின்றது. அதிமுகவுடன் இறுதிக்கட்டம் வரை பேச்சுவார்த்தை நடத்திய மதிமுக வேறு எங்கும் சேரமுடியாமல் போகவே தேர்தலை புறக்கணித்தது.

மூன்றாவது முறை வெற்றி:

ஜெயலலிதா 1,05,328 வாக்குகளில் வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்திற்கு 63,480 வாக்குகளே கிடைத்தன. அதிமுக 2011 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. 150 இடங்களில் வென்றது. மூன்றாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. திமுக 23 தொகுதிக்குள் சுருண்டது என்பதைத்தாண்டி எதிர்க்கட்சியாக விஜயகாந்த் அமர்ந்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அந்த நாற்காலி கருணாநிதிக்குத்தான் என்பது விதியாக இருந்து. அதை மாற்றி அங்கே தேமுதிகவை உட்காரவைத்தார் ஜெயலலிதா. அக்கட்சிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.

ஆனால், மிகவிரைவிலேயே ஜெ-வுக்கும் விஜயகாந்த்திற்கும் சட்டசபைக்கு மோதல் நடந்தது. நாக்கை துருத்திக் கொண்டு விஜயகாந்த் அடிக்கப் பாய்ந்தார் என விமர்சனம் எழுந்தது. 'இந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்' என்று சட்டசபையில் பேசினார் ஜெயலலிதா.

ஆனால், அவரும் ஆட்சியில் தொடரவில்லை. ஜெ சிறைக்குச் சென்றதால் இதே தொகுதியில் 2015இல் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. அப்போது மீண்டும் நிறுத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவைவிடக் கூடுதலாக 1,51,561 வாக்குகளைப் பெற்றார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற பின் 5 முறை தன் தொகுதிக்குச் சென்றார் ஜெ. வெற்றிக்குப் பின் 19.06.2011 அன்றுதான் முதல் முறையாக ஸ்ரீரங்கம் சென்றார். தன் தொகுதிக்கு 2,185 கோடியே 71 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

எனவே திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்தான் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. அவர் ஸ்ரீரங்கத்தைத் தேர்வு செய்வதற்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்தது. ஜெவின் வாழ்க்கைக்கு மறுவாழ்வு அளித்த ஸ்ரீரங்கம் பல சட்டமன்ற உறுப்பினர்களின் அரசியல் வாழ்க்கைக்கு என்ட் கார்டு போகும் அபாய பகுதியாகவும் இருந்துள்ளது. கு.ப.கிருஷ்ணன், இரா,சவுந்தரராசன், ஜெயலலிதா எனப் பலரை மேலேற்றி, பின் கீழே தள்ளிய பெருமை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உண்டு இந்த நம்பிக்கைக்குள் அடங்காத சிபிஐ கட்சியின் வேட்பாளர் சிற்றம்பலம் 1952இல் வென்றார். அதற்குப் பின் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. எனவே திருச்சியை ஒரு 'திருப்பு முனை' என்றே சொல்லலாம்.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+