யார் வேட்பாளர் என்று பார்க்காதீர்கள்... உதயசூரியன் சின்னம் தான் வேட்பாளர்... ஸ்டாலின் உருக்கம்..!
சென்னை: உதயசூரியன் சின்னத்தையும், கருணாநிதியையும் மனதில் கொண்டு திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

யார் வேட்பாளர் என்பதை திமுகவினர் பார்க்கக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளை ஒதுக்கிவைத்து விட்டு தேர்தல் பணிகள் புரிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.

வெற்றி எளிதல்ல
தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் உரையாற்றிய ஸ்டாலின் திமுகவின் வெற்றி எளிதாக இருக்காது என்றும் இதனால் இதனை மனதில் வைத்து திமுகவினர் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தாதா ஆட்சி
மத்தியில் தாதாக்கள் ஆட்சி நடப்பதாக மத்திய பாஜக அரசு மீது சாடிய ஸ்டாலின் தேவையின்றி சிலரை கட்சி தொடங்க அவர்கள் வற்புறுத்துவதாக ரஜினிகாந்தை மனதில் வைத்து தெரிவித்தார். திமுக வைத்த குறி தப்பவில்லை என்பதை நாம் நிரூபிப்போம் என நிர்வாகிகள் மத்தியில் உறுதியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அதிமுக அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றிபெற்று விடக்கூடாது எனத் தெரிவித்தார்.

பணம் விளையாடும்
அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பணம் விளையாடும் என தங்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர்களை தோற்கடிப்பதற்கான வியூகம் தயாராக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கட்சியினர் உட்கட்சி பகையை மறந்து அதனை புறந்தள்ளி ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என உருக்கமுடன் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

புத்துணர்வு
டிசம்பர் 23-ம் தேதி முதல் வாக்காளர்களை திமுகவினர் சந்திக்க வேண்டும் என்றும் இந்த முறை கிராமம் கிராமமாக தாமே செல்லவுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த உரை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக நிர்வாகிகளுக்கு புத்துணர்வும், புதிய தெம்பும் அளிக்கும் வகையில் இருந்தது.












Click it and Unblock the Notifications