கலைஞர் செய்த சாதனையை.. டாடா மூலம் தொடரும் முதல்வர் ஸ்டாலின்! ராணிப்பேட்டை மக்கள் மகிழ்ச்சி
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த உற்பத்தி ஆலை மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சமீப காலமாக புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார். தமிழ்நாட்டை விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் நோக்கத்துடன் முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக மாநில அரசு கூறியுள்ளது.

ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்கிற நோக்கத்துடன், கடந்த மார்ச் மாதம் டாடா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டிருந்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ.9000 கோடியை டாடா முதலீடு செய்கிறது. இந்த ஆலை சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தொழிற்சாலைகள் மூலம் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் உள்ளிட்ட ஆடம்பர கார்களும், மின்சார கார்களும் உற்பத்தி செய்யப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
தேசிய அளவில் மின்சார கார் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 40% ஆக இருக்கிறது. இப்படி இருக்கையில் புதிய ஆலை மூலம் தமிழ்நாட்டின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும். மட்டுமல்லாது வாகன உற்பத்தியின் மையமாக ராணிப்பேட்டை மாறும். இங்கு அமையும் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ஜாகுவார், லேண்டு ரோவர் கார்கள் உற்பத்தியாகும். இதனை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 50 ஆண்டுகளுக்கு பின்னர் கலைஞர் செய்ததை தான், டாடா நிறுவனம் மூலம் தொடர்வதாக கூறியுள்ளார். அதாவது கடந்த 1973ம் ஆண்டில் முதல் தொழிற்பேட்டையை அப்போதைய முதல்வர் கருணாநிதி ராணிப்பேட்டையில்தான் தொடங்கி வைத்தார். இப்படியாக தொடங்கப்பட்ட மாவட்டத்தின் வளர்ச்சியை, இன்று புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் புதிய உயரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கொண்டு சென்றுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் வேலூர் மாவட்டத்தின் ஓர் அங்கமாக இருந்த ராணிப்பேட்டை, பின்னர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மக்கள் பெரும்பாலும் வேலைக்கு சென்னையை நோக்கி இடம் பெயர்ந்து வந்தனர். இப்போது இங்கு சில தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இது, சோளிங்கர், ஆற்காடு, கலவை, வாலாஜா என திருத்தணி வரை உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. இப்போது டாடாவின் தொழிற்சாலை அமைந்துவிட்டால், மேற்குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கி புலம் பெயராமல் சொந்த ஊரிலேயே வேலை செய்ய முடியும். எனவே, ராணிப்பேட்டை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications