வன்மத்தை கக்குறாங்க.. தோல்வி பயத்தில் நடுங்குவது குரலிலேயே தெரியுது.. பாஜகவை அட்டாக் செய்த ஸ்டாலின்!
சென்னை: தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆறு கட்டங்களாக 488 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதும் திமுகவை விமர்சித்துப் பேசினர். அதற்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த நிலையில், மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை விமர்சித்து வருவதையும், இந்தியா கூட்டணி பற்றி பேசுவதையும் குறிப்பிட்டு, பாஜகவினர் தோல்வி பயத்தில் புலம்பி வருவதாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக இன்று வெளியிட்ட கடிதத்தில் பாஜக தலைவர்களின் பேச்சுகளை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் கடிதத்தில், “சமூக நீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துபவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.
ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்.. கலைஞர் நூற்றாண்டை இந்திய அளவில் கொண்டாடுவோம் - ஸ்டாலின் உறுதி!
திமுக மீது வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். எந்த மாநிலத்தில் பேசினாலும் பிரதமர் மோடி திமுக மீது பழிசுமத்துகிறார். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.
ஜூன் 3 அன்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாள். ஜூன் 4 அன்று நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். இந்தியா கூட்டணியின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கை ஆக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications