“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”.. ஆளுநர் விமர்சித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!
சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான, கடுமையான, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார்.

ஆளுநர் ரவி உரை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆறு தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக, தமிழ்நாடு விளங்கி வந்திருக்கிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, அவமானகரமான சமூக பாகுபாட்டு பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நிலவுவது, நாம் கூட்டாக அவமானப்படக்கூடிய விஷயம்.
அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியை விட மிகவும் குறைவானதாகவும், 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களை கூட செய்ய இயலவில்லை. தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இளைஞர்கள் போதைப் பழக்கம்
இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்கள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவைக் கொண்டே, அதன் புழக்கத்தின் வீச்சை கற்பனை செய்து கொள்ளலாம். இளைஞர்களைக் கொன்று, நமது மாநிலத்தின் எதிர்காலத்தைத் தனிப்பட்ட லாபத்திற்காக மூழ்கடிப்பவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீப காலமாக, தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் குறிப்பாக, போக்சோ சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 56 சதவீதம் போக்சோ வழக்குகளும், 33 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டுப் பெண்களும், மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும், பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.
பெண்கள் அச்சம்
இந்தியா பெண்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டில் தொழில்முனைவோராகவும், லட்சியம் மிக்கவர்களாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் கல்வியில் பெண்களின் எழுச்சியை நேரடியாகக் காண முடிகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், ஆண்களை விட பெண்களே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில், பெண்கள் தங்கள் கனவுகளையும், தொழில் முயற்சிகளையும் தொடர, வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச் செய்துவிடும்.
ஆகையால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றும் நம்மை முன்னேறவிடாமல் பின்னுக்கு இழுத்து, வளமான மற்றும் வளர்ந்த மாநிலம் மற்றும் தேசமாக மாற வேண்டும் என்ற நமது கனவை சிதைக்கின்றன. இவற்றை தீவிரமாகவும், உடனடியாகவும் சரிசெய்ய வேண்டும்." என உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் பதில்
இந்நிலையில், பெண் கல்வியில் சிறந்து விளங்குவதிலும், தொழிலாளர் பங்கேற்பில் நாட்டுக்கே முன்னணியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான அமைச்சர் கீதா ஜீவன் கட்டுரையை மேற்கொள்காட்டி முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிக அளவு பெண்கள் பணிபுரியும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பெண்களுக்கான கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என்பதை அமைச்சர் கீதாஜீவன் விளக்கமாக கூறியுள்ளார்.
குற்றச்செயல்களுக்கு எதிரான விரைவான, கடுமையான நடவடிக்கை மற்றும் குறைந்து வரும் குற்ற விகிதங்கள் ஆகியவை காரணமாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த கட்டுரை இந்த சுதந்திர தினத்தில் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில் முதல்வர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications