இன்று முதல் ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் - முதல்வரை சீண்டிய பாஜக
சென்னை: பிரதமரின் பாரத மக்கள் மருந்தக திட்டத்தை தற்போது பிரதியெடுத்து முதல்வர் மருந்தகம் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்தி உள்ளது ஸ்டாலினின் அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில்,"பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர்மருந்தகங்கள் தொடங்கப்படும்" என்று அறிவித்தார்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29-ம்தேதி முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் அனைத்து திட்டங்களையும் காப்பியடித்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலினை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று முதல் நீங்கள் தமிழக மக்களால் “ஸ்டிக்கர் ஸ்டாலின்” என அன்போடு அழைக்கப்படுவீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின்.
நமது பிரதமர் நரேந்திர மோடியால் "பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம்" திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் 1,200க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் வழங்கி மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல இதனை பிரதியெடுத்து தற்போது "முதல்வர் மருந்தகம்" என ஸ்டிக்கர் ஒட்டி தங்களின் கனவு திட்டம் போல அறிமுகப்படுத்தி, தற்போது அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரப்படுத்தியுள்ளது முதல்வர் ஸ்டாலினின் அரசு.
ஒருபுறம் நமது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் காட்சிப்படுத்தி, பின்புறம் அதன் ஓர் அம்சமான “காலை உணவு” திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பின்னர், பிரதமரின் ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா போன்ற பல மக்கள் நலத்திட்டங்களை தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி தங்கள் திட்டம் போல் மாயை உருவாக்கியது. அந்த வரிசையில் தான் தற்போது மக்கள் மருந்தகம், முதல்வர் மருந்தகமாக புதியதாக உரு மாற்றப்படுகிறது.
சமீபத்தில், நான் முதல்வன் சமூக வலைதளத்தில், நமது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம் இன்டெர்ன்ஷிப் திட்டத்தின் பெயரை சிறிய எழுத்துகளில் வெளியிட்டு, மத்திய அரசின் திட்டம் என்பதை மறைத்து திமுகவின் திட்டம் போல் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
எனவே, திராவிட முன்னேற்றக் கழகம், இனியாவது பிரதமர் மோடி அவர்களின் முன்னேற்ற திட்டங்களை காப்பியடித்தோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ "திராவிட மாடல்" என பொய் பிம்பம் உருவாக்காமல், மத்திய அரசின் திட்டங்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.
அதன் முதற்கட்டமாக, PM Internship மத்திய அரசின் திட்டம் என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும். அதுதான் தலைமைக்குரிய பண்பு என்பதை உணருங்கள் திரு ஸ்டிக்கர் ஸ்டாலின் அவர்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications