வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்னும் நேரடியாக அரசியல் களத்துக்கு வரவில்லை. அதேவேளையில் தேர்தல்களின்போது திமுகவின் வெற்றிக்கு உழைத்து வருகிறார். இந்நிலையில் தான் சென்னையில் இன்று அரங்கேறிய நிகழ்வு சபரீசன் நேரடியாக அரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளரராக ஆதவ் அர்ஜுனா உள்ளார்.

இவர் திமுகவில் இருந்து விலகி விசிகவில் இணைந்தார். விசிகவில் இருந்து தவெகவிற்கு வந்துள்ளார். தவெகவில் சேர்ந்தது முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா தவெக வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவை வீழ்த்த பிளான்
ஆதவ் அர்ஜுனாவை வீழ்த்த திமுக வியூகம் வகுத்து வருகிறது. அவரை எதிர்த்து கார்த்திக் மோகன் என்பவரை திமுக வேட்பாளராக களமிறக்கி உள்ளது. இவர் அண்ணா நகர் எம்எல்ஏவாக உள்ள எம்கே மோகனின் மகன் ஆவார். கார்த்திக் மோகன், திமுக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளார். குறிப்பாக ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் நெருக்கமாக உள்ளார்.
அதுமட்டுமின்றி ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்தபோது அவர் கார்த்திக் மோகன், சபரீசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். மூவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். இதனால் ஆதவ் அர்ஜுனாவை, முன்னாள் நண்பர் கார்த்திக் மோகனை வைத்து வீழ்த்த திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு பக்கப்பலமாக இருக்கிறார் சபரீசன்.
மனைவியுடன் சபரீசன் திடீர் என்ட்ரி
இந்நிலையில் தான் வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் திமுக பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தொகுதியில், மேற்கொள்ள வேண்டிய பிரசார வியூகம், தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திடீரென சபரீசன் என்ட்ரி கொடுத்தார். அவர் தனது மனைவி செந்தாமரையுடன் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றார்.
திமுக வெற்றி பெறும்
கூட்டம் முடிந்து சபரீசன் கிளம்பியபோது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? விஜயின் தவெக வருகை உள்ளிட்டவை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு சபரீசன், ''திமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
நாங்கள் நம்பிக்கையாக பணியாற்றி வருகிறோம். 2 தொகுதியில் போட்டியிடுவவை வைத்தே விஜயின் தன்னம்பிக்கை தெரிகிறது. விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் கிடையாது. 100% திமுகவின் வெற்றி உறுதி'' என்றார்.
நேரடி அரசியலில் சபரீசன்
சபரீசனின் இந்த திடீர் நடவடிக்கைகள் தான் தற்போது கவனம் பெற்று உள்ளது. மேலும் அவர் நேரடி அரசியலுக்கு வர உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏனென்றால் சபரீசன் திமுகவிற்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தாலும் கூட நேரடியாக பேட்டி அல்லது திமுக நிர்வாகிகளின் கூட்டங்களில் பங்கேற்றது கிடையாது. இப்போதும் அவரது 'பென்' எனும் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் திமுகவிற்காக பணியாற்றி வருகிறார்.
இப்படியான சூழலில் முதல் முறையாக அவர் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் மனைவி செந்தாமரை உடன் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி பத்திரிகைக்கு அரசியல் சார்ந்து பேட்டியும் அளித்துள்ளார். இதனால் விரைவில் சபரீசன் நேரடி அரசியலுக்கு வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications