நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகளுக்கு செம நியூஸ்! பிரசாரத்திற்கு தளர்வுகள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.

கொரோனா
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

தளர்வுகள்
இப்போது வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம்
அதேநேரம் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் இதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக உரிய அலுவலரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்
நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications