"தரதரவென இழுத்த அதிகாரிகள்.. செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்!" மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரபர
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு இதய நாளங்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதுபோது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாகச் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க வந்தேன்.
அவர் சோர்வாக காணப்பட்டார். தான் கைது செய்யப்பட்ட போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும் தன்னை அதிகாரிகள் தரதரவென இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் சொன்னார். தனக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் இதனால் அதிகம் பேச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனக்கு துன்பம் கொடுத்த அதிகாரிகள் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தும் கூட தன்னை மோசமாக நடத்தியதாக கூறினார். நெஞ்சு வலி என்று சொன்ன பிறகும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வாகனத்தில் ஏற்றி கீழே தள்ளினர் என்பது குறித்தும் தெரிவித்தார். அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறினார். இதனால் தலை மற்றும் காதின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் விசாரித்து உரிய முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு புகார் அடிப்படையிலும் விசாரணை நடத்த உரிமை உள்ளது. தானாக வந்து விசாரிக்கவும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் புகாரும் வந்தன. நாங்களும் செய்திகளை பார்த்தோம். அதன் அடிப்படையில் இப்போது வழக்கு விசாரணைக்காக இங்கே வந்துள்ளோம்.
அமைச்சர் என்று இல்லை.. யாருக்கு மனித உரிமை மீறல் என்றாலும் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை ஊடகங்களில் வரவில்லை அவ்வளவு தான். அமைச்சர் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்வது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications