'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி
சென்னை: தமிழகம் முழுவதும் களவுபோன கோயில் சிலைகளைப் பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சிலைகள் கடத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளியில் பிளாஸ்டிக் டிரேடர்ஸ் அசோஷியேஷன் சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

கொரோனா 3ஆம் அலை
நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய தயாநிதி மாறன் எம்பி, "கொரோனா மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். கடந்த 4 நாட்களாகச் சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம். இதனால் தான் 9 இடங்களில் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "திருவொற்றியூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இரண்டொரு நாளில் முதல்வர் ஆணைக்கிணங்க கும்பாபிஷேக ஏற்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் சன்னதி தெருவில் பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால், அங்குள்ள பாஸ்ட் புட் கடைகள் மற்றும் கறிக் கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியை அறநிலையத்துறை எடுக்கும்.

கோவில் ஆக்கிரமிப்பு
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயில் நிலங்களில் எளிய மக்களின் வீடுகள் இருக்கும்பட்சத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவோ அல்லது கோவில் இடங்களிலே புதிய குத்தகை முறையில் இடம் வழங்கவும் தயாராக உள்ளோம்.

சிலை கடத்தல்
தமிழகத்தில் உள்ள களவு போன கோயில் சிலைகளை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் சிலைகளை கடத்தி சென்றவர்கள் குறித்த தகவல்களையும் சிலைகள் எங்குக் கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய அனைவரது மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications