மாரி செல்வராஜ் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு
சென்னை: மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து பேசியதற்கு சமூக வலைதளங்களில கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் மாரி செல்வராஜ் பேசியதில் தவறு இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள படம் மாமன்னன்.

இதுதான் தனது கடைசி திரைப்படம் என்றும்,இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் உதயநிதி ஏற்கனவே கூறியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த 16ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது. டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மாமன்னன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. அப்போது மாரி செல்வராஜ் பேசும் போது "மாமன்னன் படம் உருவாக முக்கிய காரணமே தேவர் மகன் படம் தான். அந்த படத்தை பார்த்த நாளில் இருந்து உருவானது தான் மாமன்னன். அப்படத்தை பார்த்த பின்னால் என்னில் ஏற்பட்ட வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாமே மாமன்னன் படத்தில் வைத்துள்ளேன்.
ஒரு சினிமா சமூகத்தை எப்படி புரட்டிப்போடுது; ஒரு பக்கம் சினிமா எடுப்பவர்களுக்கு இன்ஸபிரேஷனாக இருக்கு; மறுபக்கம் வேறொரு தாக்கத்தை ஏற்படுத்துது. இந்த 2 பக்கமும் யோசித்து எது சரி, எது தப்பு என்று தெரியாமல் உழன்று கொண்டிருந்தேன். தேவர் மகன் படம் எனக்கு பெரிய மனப்பிறழ்வை ஏற்படுத்திய படம். படத்தில் ரத்தமும் சதையுமா இருந்தது. படத்தை எப்படி புரிந்துகொள்வது ? இந்தப் படம் சரியா தப்பானு தெரியாம மனதில் அப்படி ஒரு வலி.
அந்த தேவர் மகன் உலகத்துக்குள்ள பெரிய தேவர் இருக்காரு. சின்ன தேவர் இருக்காரு. இப்படி எல்லாரும் இருக்காங்க. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருக்கும். அதை முடிவு பண்ணி எங்க அப்பாவுக்காக எடுத்தது தான் மாமன்னன்.

கமல் சார் உருவாக்கிய இப்படம் இத்தனை நாட்கள், காலம், யுகங்கள் தாண்டியும் திரைக்கதையின் மாஸ்டராக இருக்கிறது. தேவர் மகன் ஓரு மாஸ்டர் ஸ்ட்ரோக். எல்லா டைரக்டர்களும் அப்படத்தை பார்த்து படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். பரியேறும் பெருமாள் பண்ணும்போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் எடுத்தேன். கர்ணன் பண்ணும் போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் பண்ணேன், மாமன்னன் பண்ணும் போதும் தேவர் மகன் பார்த்துவிட்டு தான் எடுத்தேன்" என்றார்.
இந்த படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே இது தேவர் காலடி மண்ணே என்ற பாடல் வைத்து சாதி பெருமையை வளர்த்துவிட்டதால் இசக்கி போன்ற ஆட்கள் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரது பேச்சுக்கு தேவர் மகன் திரைப்பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பையும் பல்வேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தேவர் மகன் என்ற ஒரு படம் மட்டுமே சாதிய மோதலையும் சாதி வெறியையும் தூண்டுவதாக மாரி செல்வராஜ் பேசியதாக குற்றம்சாட்டியுள்ள கமல் ரசிகர்கள் இது அரவேக்காட்டுத்தமான பேச்சு. நீங்க மாறுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது என்று பரியேறும் பெருமாள் படத்தினால் எல்லாரும் திருந்திட்டானுங்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதேநேரம் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துக்ளை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications