"இது என்னோட விடைத்தாளே இல்லை!" நீட் தேர்வில் பெரிய குளறுபடி? கோர்ட்டுக்கு போன சென்னை மாணவி! பரபரப்பு
சென்னை: நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவ இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. யுஜி மற்றும் பிஜி மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தாலும் கூட, நீட் விலக்கு கிடைக்காததால் இங்கும் நீட் மதிப்பெண்கள் மூலமே மருத்துவ படிப்புகளுக்குக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நீட்
அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு தொடர்பாகச் சென்னை சேர்ந்த மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாணவி வழக்கு
நீட் தேர்வில் தனது விடைத்தாள் மாறி விட்டதாகக் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தவறான விடைத்தாள்
தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி தனது சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கைரேகை
விடைத்தாளில் உள்ள கைரேகையைச் சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நாளை விசாரணை
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மாணவியின் முக்கிய உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications