விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை.. போராட்டத்தை அறிவித்த மாணவர் காங்கிரஸ்
சென்னை: விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் உள்ளது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுப்பதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் மாணவர் காங்கிரஸ் கூறியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தனிப்பெரும் கட்சியாக உள்ள விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் இதற்கு இன்னும் இசைவு கொடுக்கவில்லை.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுவதாக அவர் மீது பல்வேறு கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மாணவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில தமிழக வெற்றி கழகம் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று நடிகர் பிரகாஷ் ராஜ், கமல்ஹாசன் ஆகியோரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்க வேண்டும் எனவும், பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.














Click it and Unblock the Notifications