சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்!
சென்னை: திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 3 மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடசென்னையில் வாயு கசிவு பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் எண்ணூரில் வாயு கசிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மூன்று மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல 35க்கும் அதிகமான மாணவிகள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக பள்ளிக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாயு கசிவுக்கு என்ன காரணம் என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியதாவது, "காலை சுமார் 10.30 மணியளவில் வகுப்பறையில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது. ஒருவர் இருவர் எனில் வழக்கமான இருமல் என்று நினைக்கலாம்.. ஆனால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது சந்தேகத்தை கிளப்பியது. ஆனாலும் கூட என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியேறினோம்.
சில மாணவிகள் மூச்சு திணறலால் கடுமையாக அவதிப்பட்டனர். அதில் ஓரிரு மாணவிகளுக்கு வலிப்பு ஏற்பட்டது. நான் உட்பட பல மாணவிகள் மூச்சுவிடவே கடுமையாக சிரமம் அடைந்தோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து உடனடியாக அவர்களது பெற்றோருக்கு போன் செய்யப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அதன் மூலம் மாணவிகளை மருத்துவமனையில் அனுமதித்தது. எங்களுக்கும் முதலுதவி செய்யப்பட்டது" என்று கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "காலை 10.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு மதியம் 2 மணிக்குதான் அழைப்பு வந்தது. பள்ளியின் போதிய அக்கறையின்மையால்தான் இது நடந்திருக்கிறது. எங்கிருந்து வாயு கசிவு ஏற்பட்டது என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். கழிவறைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து தாசில்தார் விசாரணையில் இறங்கியுள்ளார். வாயு கசிவுக்கான காரணம் குறித்து நாளை மாவட்ட ஆட்சியரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications