தேர்தல் வந்துருச்சு டும் டும் டும்.. நாளை புதுக் கட்சி பிறக்கப் போகுது.. பனங்காட்டுப் படை!
சென்னை: தமிழகத்தில் நாளை புதிதாக ஒரு கட்சி பிறக்கவுள்ளது. அக்கட்சியின் பெயர் பனங்காட்டுப் படை.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி பிறந்தபோது இப்படியும் ஒரு கட்சிப் பெயரா. திராவிடம் இல்லை ஆரியம் இல்லை காரீயம் இல்லை என்று பலரும் முனுமுனுத்தனர். ஆனாலும் கமல்ஹாசன் கண்டு கொள்ளவில்லை. இப்போது மக்களின் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொண்டு விட்டது மக்கள் நீதி மய்யம்.
அந்த அடிப்படையில் இப்போது பனங்காட்டுப்படை என்ற புதிய பெயரில் வித்தியாசமான பெயருடன் தமிழகத்தைக் கலக்க வருகிறது இன்னொரு கட்சி. நாளை இது உதயமாகிறது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.. வாழ்ந்து கெட்ட தேமுதிக.. ஒரு பிளாஷ்பேக்!
குவியல் குவியலாக கட்சிகள்
தமிழகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கட்சிகளும், அமைப்புகளும் உள்ள நிலையில் நாளை சேலத்தில் புதிதாக ஒரு கட்சி உதயமாகிறது. இதைத் தொடங்குபவர் சுபாஷ் பண்ணையார்.
சுபாஷ் பண்ணையார் கட்சி
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் தென்மாவட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்தவர் மறைந்த வெங்கடேஷ் பண்ணையார். அவரது மறைவுக்கு பின்பு சுபாஷ் பண்ணையார் தனது அண்ணன் வெங்கடேஷ் பண்ணையார் இடத்திற்கு வந்தார்.
அரசியல்வாதி
இதுவரை நாடார் இனச்சங்கங்கள் மற்றும் அமைப்பு நடவடிக்கைகளில் மட்டும் தீவிர ஈடுபாடு காட்டி வந்த சுபாஷ் பண்ணையார் புதிய கட்சியை நாளை சேலத்தில் தொடங்குகிறார்.
சேலத்தில் ஏன்
பெங்களூரு சாலையில் உள்ள வரலட்சுமி மஹாலில் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்மண்டலத்தில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் கட்சியை தொடங்குவதை விட்டு கொங்குமண்டலமான சேலத்தில் சுபாஷ் பண்ணையார் கட்சி தொடங்குவது புரியாத புதிராகவே உள்ளது.
பனை படை
சுபாஷ் பண்ணையாரின் புதிய கட்சிக்கு 'பனங்காட்டுப்படை' கட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கொடியில் பனை மர உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடி ஊதா, பச்சை வண்ணத்தில் உள்ளது. எது எப்படியோ மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் பனங்காட்டுப்படை போராடினால் அது மகிழ்ச்சியே.