“விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? கட்சிக்காக சொத்தை விற்றவன் நான்!” - வைகோ
சென்னை: முதலமைச்சர் விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கியதாக என் மீது திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறியுள்ள மதிமுக தலைவர் வைகோ, அப்படி எதுவும் வாங்கவில்லை என்றும், நான் கட்சிக்காக சொத்தை விற்றவன் என்றும் கூறியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு.. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெக பக்கம் தாவியிருக்கின்றன. இதில் மதிமுக மட்டும்தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தது. ஆனால், இன்று நடந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில், தவெகவுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை கட்சி தலைமை எடுத்திருக்கிறது.

தவெகவுக்கு தாவிய கட்சிகள்
ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து, அக்கட்சி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் இடதுசாரிகள் மட்டும் விதிவிலக்கு. சூழல் இப்படி இருக்கையில், மதிமுகவும் தற்போது தவெகவுக்கு ஆதரவாக வந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன நடந்தது?
நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றிருந்த வைகோ, "முதலமைச்சர் விஜய் எனது வீட்டிற்கு வருவார் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. பணத்தின் மீது ஆசை இல்லாதவன் நான். பொதுவாழ்க்கையில் இருக்கும் நானும், எனது மகனும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டதாகவும், சென்னை அண்ணா சாலையில் அடுக்கடுக்கான மாளிகையை என் மகன் கட்டி வைத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்கள்.
ரூ.50 கோடி
இது போதாது என்று, விஜய்யை சந்தித்து ரூ.50 கோடி வாங்கிவிட்டதாகவும் என் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகிறார்கள். 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன். எனக்கு தெரியாதா? என் மீது இப்படி அபாண்டமாக பழி போடுவது யார் என்று.. முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க 11 ஆண்டுகள் போராடியவன் நான்.
இந்த அணை மட்டும் இல்லையெனில் மதுரை பஞ்சத்தில் சிக்கும்.. 85 லட்சம் ஏக்கர் பயிர் விளைச்சல் இல்லாமல் அழிந்துவிடும். இப்பேர்ப்பட்ட போராட்டத்தை நடத்திய என்னை பார்த்து இப்படி சொல்வதா? நான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன். அவர்களை தூக்கி பிடித்திருக்கிறேன்.
9 ஆண்டு பயணம்
ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்? எங்களை விட வலு குறைவான கட்சிகளுக்கு, கிளை கூட இல்லாத, நாளை அழிந்துபோகும் கட்சிக்கு அவர்கள் மாநிலங்களவை எம்பி பதவியை கொடுத்தார்கள். எங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. எல்லா கட்சிகளும் அவரவர் சின்னத்தில் நின்றபோது.. எங்களை மட்டும் அவர்களுடைய சொந்த சின்னத்தில் நிற்க சொன்னார்கள். வேறு வழியில்லாமல் நின்றோம். கடந்த 9 ஆண்டுகளாக தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து பணித்தோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications