துரை வைகோவை ராஜினாமா பண்ண சொல்லுங்க.. மதிமுக வெளியேறியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்ததைத் தொடர்ந்து, திருச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது வைகோ மற்றும் துரை வைகோவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், திருச்சி எம்.பி. துரை வைகோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் பெரும்பான்மை பெற்றதை அடுத்து திமுகவுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவுமான கருத்துகள் மட்டுமே மதிமுகவில் இருந்து வெளி வந்தது. இதனை திமுகவும் விமர்சித்து வந்தது. மேலும் விஜய் வைகோவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்ததை அடுத்து மதிமுக எப்போது வேண்டுமானாலும் தவெகவில் இணையலாம் என தகவல்கள் பரவின.

பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்
ஆனால் இதற்கெல்லாம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம் எனவும், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என சொல்லி வந்தார். இந்த நிலையில் இன்று நடந்த மதிமுக பொதுக்குழு மற்றும் உயர்மட்டக் குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேர்தல் நேரத்தில் மதிமுக வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுகவில் இருந்து மதிமுக வெளியேறியதை திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் தலைமையில் ஏராளமான திமுகவினர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். அப்போது அவர்கள் வைகோ, மற்றும் துரை வைகோவிற்க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
துரை வைகோ ராஜினாமா செய்யனும்
குறிப்பாக சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான சீர்காழி செந்தில்செல்வன் மற்றும் கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோருக்கு திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதேபோல் திமுக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திமுக தொண்டர்களின் உழைப்பைத் திருடி வெற்றி பெற்றதாகவும், எனவே அவர் தனது நாடாளுமன்ற பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.














Click it and Unblock the Notifications