தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்.. செல்வப்பெருந்தகை தூக்கியடிப்பு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பதிலாக அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்களில் செல்வப்பெருந்தகையும் ஒருவர் ஆவார்.

செல்வப்பெருந்தகை தூக்கியடிப்பு!
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, தேர்தல் முடிவுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்று செல்வப்பெருந்தகை கூறி வந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் சூழலும் மாறிவிட்டதால், அவரை மாற்ற கட்சி மேலிடமும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருக்க கூடிய மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனே அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்
தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தொடர்ந்து பேசி வந்தார். மாணிக்கம் தாகூரை பொறுத்தவரை ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக பார்க்கப்படுவார். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் பயணித்து வருகிறார். தனது சரவெடி பேச்சுகளால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர் மாணிக்கம் தாகூர்.
தற்போது தமிழகத்தில் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், கட்சியை வளர்த்தெடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூரை நியமனம் செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை இந்த முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், மாணிக்கம் தாகூரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.














Click it and Unblock the Notifications