டெல்லிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய செல்வப்பெருந்தகை? தவெக ஆதரவோடு களமிறங்கும் மாணிக்கம் தாகூர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை செல்வப்பெருந்தகை டெல்லி மேலிடத்திடம் சமர்ப்பித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அவர் மகளின் திருமணத்தில் கூட டெல்லி காங்கிரஸ் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதன் மூலமாகவே டெல்லி மேலிடம் தன்னை புறக்கணிப்பதாக கருதி செல்வப்பெருந்தகை கடிதம் சமர்ப்பித்துள்ளார். இதனால் விரைவில் மாணிக்கம் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும், அவருக்கு தவெகவின் ஆதரவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் பெரும் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் இந்தப் பதவியில் தொடர மாட்டேன் என்று செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை செல்வப்பெருந்தகை டெல்லி மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

டெல்லி காங்கிரஸ் தலைமை தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கருதியே செல்வப்பெருந்தகை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற செல்வப்பெருந்தகையின் மகள் திருமண விழாவிற்கு டெல்லி காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் பங்கேற்கவில்லை.
ப.சிதம்பரம் மட்டுமே பங்கேற்று இருந்தார். அதேபோல் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இந்த முக்கியக் குடும்ப நிகழ்வில் டெல்லி மேலிடம் காட்டிய அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு செல்வப்பெருந்தகையை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. இதனால் செல்வப்பெருந்தகை தாமதிக்காமல் கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.
செல்வப்பெருந்தகையின் இந்த ராஜினாமா முடிவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸின் அடுத்த புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் மிக முக்கியமான அரசியல் திருப்பமாக, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெகவின் முழு ஆதரவும் மாணிக்கம் தாகூருக்கு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், தவெக - காங்கிரஸ் இடையே ஒரு புதிய அரசியல் இணக்கம் ஏற்படுவதற்கு மாணிக்கம் தாகூரின் தலைமை உதவியாக இருக்கும் எனப் பலரும் கணிக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பல்வேறு உள்கட்சிப் பூசல்கள் வெடித்து வருகின்றன.
குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் திமுகவின் செயல்பாடுகளைத் தொடக்கத்திலிருந்தே விமர்சித்து வந்தனர். தற்போதைய சூழலில் செல்வப்பெருந்தகையின் விலகலும், தவெக ஆதரவுடன் மாணிக்கம் தாகூரின் சாத்தியமான வருகையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கூட்டணியின் அச்சையே மாற்றியமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தீவிரமாகக் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications