திருமாவை இனியும் நம்ப முடியாது.. அவர் பேசுவது சரியில்லை.. கோபத்தின் உச்சிக்கே போன விஜய்! ஏன்?
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீதிருந்த நம்பக்கத் தன்மை எனக்கு குறைந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் வருத்தப்பட்டுள்ளார் முதல்வர் விஜய். இதையடுத்து திருமாவின் பேச்சு குறித்து முதல்வர் வருத்தப்பட்டதை போன் போட்டு வெளிப்படுத்தியுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
தினம் தினம் ஒரு கருத்தையும் தனது நிலைப்பாட்டையும் சொல்லி வருகிறார் விசிக தலைவர் திருமா. முதலில் சொல்லும் ஸ்டேட்மெண்ட்டுக்கும் அடுத்து சொல்லும் ஸ்டேட்மெண்ட்டுக்கும் முரண்பாடுகள் இருக்கிறது. இதனால் திருமாவுக்கு என்னாச்சு? என்று தவெக, திமுக, அதிமுக கட்சிகள் சந்தேகத்துடன் பார்க்கின்றன.

சமீபத்தில் "அமைச்சரவையிலும் பங்கு; திமுகவுடனும் நட்பு" என்று ஒரு வித புதிய யுக்தியை பயன்படுத்தும் கருத்தை கூறியுள்ளார் திருமா. அவரின் கருத்து தவெகவிலும், அதனை ஆதரிக்கும் கட்சிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஸ் ஆகியோரிடம், திருமாவின் ஸ்டேட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் விஜய்.
அமைச்சரவையிலும் பங்கு ; திமுகவுடனும் நட்பு
அப்போது, " திருமாவின் அண்மைகால பேச்சுக்கள் சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சொன்னதால் தான் அவரின் ஆதரவை கேட்க சொன்னேன். ஆனா, நமது ஆட்சியில் இருப்பார்கள், திமுகவுடனும் நட்பாக இருக்கிறோம் என அவர் சொல்வது என்ன மாதிரி அரசியல்? அவர் மீதான நம்பகதன்மை குறைகிறது " என்று விஜய் கோபமாக கூறி உள்ளார்..
இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் திருமா - விஜய் கோபம்
மேலும், கூட்டணியிலிருந்து கொண்டு கான்ட்ராவெர்சிகளை உருவாக்க வேண்டாம், ஆதரவை வாபஸ் பெறுவதாக இருந்தால் வெளியேறட்டும் என அவரிடம் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது தானே? அப்புறம் ஏன் இப்படி முரண்பட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்? என்றும் கேள்வி கேட்டுள்ளார் விஜய்.
தலைவருக்கு என்னாச்சு?
திருமா மீது விஜய்க்கு இருந்த சந்தேகம் இப்போது விசிகவிடமும் தொற்றி கொண்டிருக்கிறது. விசிகவின் இரண்டாம் நிலை தலைவர்கள், " தலைவருக்கு என்னாச்சு? ஏன், இப்படி குழப்பி குழப்பி கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்? என பேசிகொள்கின்றன. இதனை திருமாவிடம் நேரடியாக கேட்க முடியாமலும் அவர்கள் தவித்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வின் வைஸ்னவா எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்கள் என சொல்லி பாஜகவுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருப்பதை வெளிப்படுத்தினார் திருமா.
திமுகவுடன் நட்பாகத்தான் இருக்கிறோம்
ஏற்கனவே திமுகவுடன் நட்பாகத்தான் இருக்கிறோம், உறவு தொடர்கிறது என திருமா சொன்னதையே விஜய் ரசிக்கவில்லை. இப்போது பாஜகவுடனும் எனக்கு நட்பு உண்டு என்பதை அவர் சொல்லாமல் சொல்வதையும் ரசிக்கவில்லையாம் விஜய். அதனால் தான் ஆதவ் அர்ஜுனாவிடம், " திருமா மீதிருந்த நன்பகத் தன்மை எனக்கு குறைகிறது" என்று எரிச்சலுடன் வருத்தப்பட்டுள்ளார்.
விஜயின் இந்த வருத்தம் ஆதவ் அர்ஜுனாவுக்கு கவலையை கொடுத்துள்ளது. அவர் தான் திருமாவை தவெக கூட்டணிக்கு அழைத்து வந்தவர். இதற்கிடையே, அமைச்சர் வன்னியரசுவை தொடர்புகொண்டு, திருமாவின் பேச்சு குறித்து முதல்வர் வருத்தப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications