காசா விஷயத்தில்.. இந்தியாவின் மௌனம் நல்லது கிடையாது! சொல்கிறார் சோனியா காந்தி!
டெல்லி: காசா விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். சமீப காலமாகவே, பெரியதாக அரசியல் விவகாரத்தில் சோனியா காந்தி கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது காசா விஷயத்தில் அவர் கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
காசா விஷயத்தில், மோடி அரசு கடைபிடித்து வரும் கல் போன்ற மௌனம் மற்றும் செயலற்ற தன்மை, இந்தியாவின் தார்மீக நிலைப்பாட்டை சீர்குலைத்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பு
தேசிய நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது, “காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், நாட்டின் நலன் சார்ந்த கண்ணோட்டத்திலும் விளக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை, பாலஸ்தீனம், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நமது பாரம்பரிய நட்பு நாடுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தலையீடு
இந்த விவகாரத்தில் இந்தியா மௌனம் காப்பதன் மூலம், அந்தப் பிராந்தியத்தில் ஒரு மத்தியஸ்தராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தூதரக நலன்களுக்குப் பின்னடைவாகும்.
பிரதமரின் இஸ்ரேல் பயணம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்துவதற்குச் சற்று முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்றது, ஒரு குழப்பமான முடிவு என்று சோனியா காந்தி விமர்சித்திருக்கிறார்.
காசாவில் இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக 2025ம் ஆண்டு செப்டம்பரில் ஐநா ஆணையம் முடிவுக்கு வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். முரளிதர் தலைமையிலான ஆணையத்தின் 2026ம் ஆண்டு ஜூன் மாத அறிக்கையும், இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீன மக்களை அழிக்கும் நோக்கம் கொண்டவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாஜக பதிலடி
சோனியா காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, காங்கிரஸ் கட்சி வெளியுறவுக் கொள்கையிலும் வாக்கு வங்கி அரசியலை புகுத்துவதாகக் கூறியுள்ளது. காசா விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருவதாகவும், மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதோடு, ஐநா சபையில் போர்நிறுத்த தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications