அடுத்த டார்கெட் பத்திரப்பதிவுத்துறை! வெளியாகிறது வெள்ளை அறிக்கை.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!
சென்னை: மின்வாரியத்துறையில் வெளியாகியிருந்த வெள்ளை அறிக்கை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அவசியம் எனில் பத்திரப்பதிவுத்துறையில் இருந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.
தமிழக அரசியல் களம், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அப்படியே தலைக்கீழாக மாறியிருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்ததையடுத்து.. கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதை தீவிரமாக விசாரித்து முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

புதிய ரெய்டு
இதன் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டிருந்தது.
ரூ.3.23 கோடி வரை மோசடி?
நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்த காலத்தில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் ரூ.3.23 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தது. இது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
புதிய அரசு, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும்.. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் ரெய்டு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
வெள்ளை அறிக்கை
இந்த சலசலப்புகள் குறைவதற்குள், ரெய்டு நடந்த அதே நாளில் மின்சாரத்துறை சார்பில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதன் மூலம் ரூ.58000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த ரெய்டு
மட்டுமல்லாது முறைகேடுகள் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மல் குமார் கூறியிருந்தார். அதாவது முன்னாள் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் விரைவில் ரெய்டு நடத்தப்படும் என்பதை அமைச்சர் சூசகமாக கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில், தற்போது பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது புதிய சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது.
பத்திரப்பதிவு துறை அடுத்த டார்கெட்
அமைச்சர் இது குறித்து கூறுகையில், "பத்திரப்பதிவு துறையில் தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுத்துறை சர்வர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க குழு அமைக்கப்படும். இந்த துறை வெளிப்படைத்தன்மையுடன் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த பேச்சு, அடுத்த ரெய்டுக்கு தவெக அரசு ரெடியாகிறதோ? என்கிற கேள்வியை எழுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications